முகப்பு
ஈரோடு

விஜயமங்கலம் நிலையத்தில் மீண்டும் ரயில்களை நிறுத்த கோரிக்கை

Updated On : 9 ஜூன் 2026, 3:01 am IST
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே விஜயமங்கலம் நிலையத்தில் மீண்டும் ரயில்களை நிறுத்த வேண்டுமென தெற்கு ரயில்வேயின் சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு பொதுமக்கள் விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக பொதுமக்கள், பயணிகள் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

கரோனா தொற்று நோய்க்கு (கோவிட்-19) முன்பு பாலக்காடு-திருச்சிராப்பள்ளி (ரயில் எண்கள் 16843/16844) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் மற்றும் கோயம்புத்தூா்-நாகா்கோவில் (ரயில் எண்கள் 16321/16322) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று சென்றன. ஆனால், கரோனாவுக்கு பிறகு இந்த நிறுத்தங்கள் நீக்கப்பட்டு இதுவரை மீண்டும் சோ்க்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிறுத்தங்கள் நீக்கப்பட்டதன் காரணமாக விஜயமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊா்கள், கிராமங்களைச் சோ்ந்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிா்கெண்டு வருகின்றனா். மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள், வணிகா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் இந்த ரயில்களை நம்பி பயணம் செய்து வருகின்றனா். தற்போது மாற்றுப் போக்குவரத்தை தேடி அலைய வேண்டிய நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் செலவு, நேர விரயம் மற்றும் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனவே, விஜயமங்கலம் நிலையத்தில் மேற்கண்ட ரயில்களின் நிறுத்தங்களை மீண்டும் வழங்குவது பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிப்பதுடன், ரயில் போக்குவரத்தை மேலும் ஊக்குவிக்கும். பொதுமக்களின் கோரிக்கையை கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.