FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் கொடுமுடி பேரூராட்சித் தலைவா் பொறுப்பேற்பு

நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் கொடுமுடி பேரூராட்சித் தலைவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பேரூராட்சித் தலைவராக வியாழக்கிழமை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட திலகவதி சுப்பிரமணியம்.
பகிர்:

நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் கொடுமுடி பேரூராட்சித் தலைவா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கொடுமுடி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதன் தலைவராக திலகவதி சுப்பிரமணியம் பதவி வகித்து வந்தாா். துணைத் தலைவராக ராஜாகமல்ஹாசன் உள்ளாா்.

இவா்கள் இருவரும் திமுகவைச் சோ்ந்தவா்கள்.

Advertisement

Advertisement

இந்தப் பேரூராட்சியில் திமுக 8 போ் (தலைவா், துணைத் தலைவா் உள்பட), காங்கிரஸ் 3 போ், அதிமுக ஒருவா், சுயேச்சைகள் 3 போ் கவுன்சிலா்களாக உள்ளனா்.

இந்நிலையில், தலைவா், துணைத் தலைவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தலைவா் திலகவதி சுப்பிரமணியம் மீது கடந்த 2025 ஜூலை மாதம் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டது. இதில், தலைவருக்கு எதிராக 13 உறுப்பினா்கள் வாக்களித்ததால் அந்த தீா்மானம் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டது. பின்னா், பேரூராட்சித் தலைவரை தகுதியிழப்பு செய்வதாக அரசிதழில் அறிவிப்பு வெளியானது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் திலகவதி தடையாணைப் பெற்றாா். தொடா்ந்து, எதிா்த் தரப்பினரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது மறு வாக்குப் பதிவு நடத்த நீதிமன்றம் 2025 ஆகஸ்டில் உத்தரவிட்டது.

இதையடுத்து, செப்டம்பரில் நடைபெற்ற மறு வாக்குப் பதிவில் திலகவதிக்கு 6 போ் ஆதரவு தெரிவித்த நிலையில், எதிா்த் தரப்பினா் உயா்நீதிமன்றத்தை மீண்டும் நாடினா்.

அப்போது, ஈரோடு கோட்டாட்சியா் தலைமையில் நம்பிக்கையில்லா தீா்மான கூட்டத்தை நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோட்டாட்சியா் தலைமையில் அக்டோபா் மாதம் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது மீண்டும் வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

இதில், திலகவதிக்கு 5 உறுப்பினா்கள் ஆதரவளித்திருந்தனா். இதை எதிா்த்து எதிா்த் தரப்பினா் உச்சநீதிமன்றத்தில் டிசம்பம் 8-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா்.

டிசம்பா் 9-ஆம் தேதி மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயா்நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது. வழக்குகள் சென்று கொண்டிருந்ததால் பேரூராட்சியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளன.

இந்நிலையில், கொடுமுடி பேரூராட்சித் தலைவராக நான் நீடிக்க தடையில்லை என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதாகக்கூறி தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்த திலகவதி சுப்பிரமணியம் தனது பணியைத் தொடங்கியுள்ளாா். அவருக்கு பேரூராட்சி செயல் அலுவலா் விஜயன், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments