மானுப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் மீது குற்றச்சாட்டு
உடுமலை அருகே மானுப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் மீது பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
உடுமலை அருகே மானுப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் மீது பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
உடுமலை ஒன்றியம், மானுப்பட்டி கிராம சபைக் கூட்டம் ஊராட்சி செயலர் சிவகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஒன்றிய ஆணையர் ரமேஷ்குமார், துணை ஆணையர் செல்வகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் பேசியதாவது:
திடக் கழிவு மேலாண்மை திட்டம், குடிநீர் விநியோகம், தெருக்கள் தூய்மை, கழிப்பிடங்கள் என அனைத்து திட்டங்களும் முடங்கிக் கிடக்கின்றன. பணிகள் முறைப்படி நடப்பதும் இல்லை. இதுகுறித்து புகார் கூறுவதற்காக ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று பணிகள் குறித்து கேட்டால் ஊராட்சி செயலர் பொதுமக்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறார். குறிப்பாக ஊராட்சியில் வரவு-செலவு கணக்குகள் எதுவுமே முறைப்படி பராமரிப்பதில்லை. ஊராட்சி நிர்வாகத்தில் ஊழல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.
இதைத் தொடர்ந்து, ஒன்றிய அதிகாரிகளை பொதுமக்கள் கிராமத்துக்குள் அழைத்துச் சென்று அனைத்து பணிகளையும் நேரில் பார்வையிடச் செய்தனர். அப்போது குவிந்து கிடக்கும் குப்பைகள், சுகாதார சீர்கேடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என அதிகாரிகளிடம் பொதுமக்கள் மற்றும் மானுப்பட்டி கிராம பணிக் குழு நண்பர்கள் சுட்டிக் காட்டினர். இதைத் தொடர்ந்து மானுப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதி கூறினர். மேலும் ஊராட்சி செயலர் சிவகுமாரை விரைவில் பணியிட மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் ஒன்றிய அதிகாரிக ள் உறுதிமொழி கொடுத்ததை தொடர்ந்து கூட்டம் அமைதியாக முடிவுற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.