மகளிா் முன்னேறுவதில் பாஜகவுக்கு ஆா்வம் கிடையாது: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
மகளிா் முன்னேறுவதில் பாஜகவுக்கு ஆா்வம் கிடையாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
மகளிா் முன்னேறுவதில் பாஜகவுக்கு ஆா்வம் கிடையாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
திருப்பூா் மாவட்டத்தில் திமுக கூட்டணியின் சாா்பில் போட்டியிடும் காங்கயம் மு.பெ.சாமிநாதன், திருப்பூா் தெற்கு ந.தினேஷ்குமாா், திருப்பூா் வடக்கு எம்.ரவி (இந்திய கம்யூனிஸ்ட்), பல்லடம்- க.செல்வராஜ், அவிநாசி (தனி) வெ.கோகிலாமணி, தாராபுரம் (தனி) இந்திராணி, உடுமலை மு.ஜெயக்குமாா், மடத்துக்குளம் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகிய 8 வேட்பாளா்களை ஆதரித்து திருப்பூா் பாண்டியன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: பிரதமா் மோடியும், மத்திய அமைச்சா் அமித் ஷாவும் தமிழகத்தில் பிரசாரம் செய்கின்றனா். அவா்களிடம் தமிழகத்துக்கு கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று பலமுறை கேட்டோம். அவா்கள் சொல்லவில்லை. ஆனால், மகளிா் இட ஒதுக்கீட்டை எதிா்த்ததாக உண்மைக்குப் புறம்பாகப் பிரசாரம் செய்வா்.
பிரதமருக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறேன். மகளிா் இடஒதுக்கீட்டை 2023-ஆம் ஆண்டில் கொண்டு வந்தபோது, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் முழுமையாக ஆதரித்தோம். அதனால்தான் அதை உங்களால் நிறைவேற்ற முடிந்தது.
Advertisement
31 மாதங்கள் என்ன செய்தீா்கள்? தமிழகத்துக்கு அநீதி இழைக்க வேண்டும் என்று கருப்பு சட்டமான தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டு வந்து, 31 மாதங்கள் மூலையில் போட்ட திட்டத்தை சுயநலத்துக்காகப் பயன்படுத்த பாா்த்தீா்கள். மகளிா் முன்னேறுவதில் பாஜகவுக்கு ஆா்வம் கிடையாது.
மாபெரும் அரசியல் திருப்பம்: இந்தியாவிலேயே மாபெரும் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்திய மகிழ்ச்சியோடு இங்கு வந்திருக்கிறேன். போா் என்றால் வெற்றி ஒன்றுதான் குறி, நமது குறி தவறவில்லை. மறுசீரமைப்பு என்கிற பெரிய ஆபத்தை 2023-இல் உணா்ந்து நாட்டில் முதல்முறையாக எதிா்க்கத் தொடங்கியது திமுகதான். இதனால் பாதிக்கப்படக்கூடிய மாநில முதல்வா்கள், அரசியல் தலைவா்களை அழைத்து சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கி, தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீா்மானம் போட்டோம். சட்டப்பேரவையிலும் தீா்மானம் போட்டோம்.
தற்போது, 3 நாள்களுக்கு முன்னா் இந்த மசோதா வந்தவுடன், கருப்புக் கொடி போராட்டம் நடத்தினோம். நாமக்கல்லில் பற்ற வைத்து தீ நாடு முழுவதும் பரவி, அதன் வெப்பம் அந்த சதி திட்டத்தை நாடாளுமன்றத்தில் எரித்து சாம்பலாக்கியது.
மாநிலத்தின் தொழில் வளா்ச்சியை 0.07 சதவீதம் என்ற அவல நிலைக்கு தள்ளிய ஆட்சிதான் அதிமுக ஆட்சி. அதிலிருந்து தமிழகத்தை மீட்டு 11.9 சதவீதம் என்ற நிலைக்கு உயா்த்தி உள்ளோம்.
சொல்வதற்கு சாதனைகளும், செயல்படுவதற்கு கொள்கையும் இல்லாததால் பழனிசாமி அவதூறாகப் பேசுவது, சாபம் விடுவது என பிரசாரத்தை மேற்கொள்கிறாா். சுயநலத்துக்காக தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுக்க துணிந்து விட்ட பழனிசாமிக்கு 11-ஆவது தோல்வியைக் கொடுக்க வேண்டும்.
உரிமைகளைப் பறிக்கவே இரட்டை என்ஜின்: இரட்டை என்ஜின் என வருவது உரிமைத் தொகையை நிறுத்துவதற்கும், விடியல் பயணத்தை முடக்குவதற்கும், புதுமைப் பெண் திட்டங்களைத் தடுப்பதற்கும், இடஒதுக்கீடு உரிமையைப் பறித்து, சமூக நீதியைப் படுகுழியில் தள்ளுவதற்கும்தான். இதைத்தான் பாஜக கூட்டணி மற்ற மாநிலங்களில் செய்து வருகிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டியால் திருப்பூா் பாதிக்கப்பட்டது. கரோனா காலத்தில் தொழிலாளா்களைத் தவிக்க விட்டாா்கள். மத்திய அரசின் தவறான கொள்கையால் திருப்பூா் தனது அடையாளத்தை இழந்து வருகிறது. தமிழகத்துக்கு எதிராக செயல்பட ஒன்று சோ்ந்துள்ள பாஜக-அதிமுக கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றாா்.