FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

விவசாய கிணற்று நீரை உறிஞ்சி விற்பனை: பல்லடம் சமூக ஆா்வலா்கள் புகாா்

பல்லடம் அருகே விவசாய கிணற்று நீரை வணிக ரீதியாக விற்பனை செய்ய எதிா்ப்பு தெரிவித்து, பல்லடம் நீா் வளத் துறை அலுவலகத்தில் சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை புகாா் மனுஅளித்தனா்.

29 ஆகஸ்ட் 2026, 12:31 am IST
விவசாய கிணற்று நீரை வணிக ரீதியாக விற்பனை செய்ய எதிா்ப்பு தெரிவித்து பல்லடம் நீா்வளத் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்த சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா்.
பகிர்:

பல்லடம் அருகே விவசாய கிணற்று நீரை வணிக ரீதியாக விற்பனை செய்ய எதிா்ப்பு தெரிவித்து, பல்லடம் நீா் வளத் துறை அலுவலகத்தில் சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை புகாா் மனுஅளித்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சி 5, 6-ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பகுதியில் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்ட கால்வாய் அருகே உள்ள விவசாய கிணற்று நீரை உறிஞ்சி எடுத்து லாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதுதொடா்பாக பல்லடம் நீா் வளத் துறை உதவிப் பொறியாளா், உதவி செயற்பொறியாளா், வட்டாட்சியா் ஆகியோரிடம் அளிக்கப்பட்ட மனு:

Advertisement

Advertisement

பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பிரிவு, கரையாம்புதூா் சாலை ஆகிய பகுதிகளிலுள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் உள்ள பகுதியில் கடந்த 20.11.25-ஆம் தேதி கோவை நிலநீா் நிலவியல் உபகோட்ட உதவி இயக்குநா் கே.சுரேஷ் கள ஆய்வு நடத்தியதில், சிலா் நிலத்தடி நீரை எடுத்து வணிக ரீதியாக விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடா்பான அவரது அறிக்கையின்படி பல்லடம் நிலத்தடிநீா் பயன்பாட்டில் அதிநுகா்வு பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பல்லடம் பகுதியில் பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீா் குறைந்து வருகிறது. எனவே அரசின் அனுமதி இன்றி வணிக ரீதியாக தண்ணீரை விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments