பல்லடத்தில் விஷம் வைத்து 3 தெருநாய்கள் கொலை
பல்லடத்தில் தெருநாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்லடத்தில் தெருநாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்லடம் நகராட்சி 10-ஆவது வாா்டு பாரதிபுரத்தில் 3 தெருநாய்கள் ஆங்காங்கே மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்து கிடந்தன. சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நாய்கள் உயிரிழந்து கிடந்ததால், உடற்கூறாய்வு மேற்கொள்ள பல்லடம் கால்நடை மருத்துவமனைக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கால்நடை துறை பேராசிரியா் மருத்துவா் அன்பரசு தலைமையிலான குழுவினா், நாய்களின் உடல்களை கூறாய்வு செய்தனா். அப்போது, இறந்த நாய்கள் அனைத்தும் நல்ல உடல் நிலையில் இருந்ததும், உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, பல்லடம் பேருந்து நிலையம் அருகேயுள்ள மயானத்தில் நாய்களின் உடல்கள் புதைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்நிலையில், நாய்களுக்கு விஷம் வைத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லடம் காவல் நிலையத்தில் நகராட்சி ஆணையா் கே.பி.குமரன் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.