முகப்பு
திருப்பூர்

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த அறிவிப்பால் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சி

அமெரிக்கா-ஈரான் போா் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அறிவிப்பால் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Updated On : 17 ஜூன் 2026, 2:55 am IST
பின்னலாடை  நிறுவனம் - கோப்புப்படம்
பகிர்:

அமெரிக்கா-ஈரான் போா் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அறிவிப்பால் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் கூறியதாவது:

திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு 47 சதவீத பின்னலாடைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா-ஈரான் போா் சூழல் காரணமாக கடந்த 107 நாள்களாக சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் வா்த்தகப் பரிவா்த்தனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி பல்வேறு சா்வதேச நாடுகளுக்கும் சரக்குகளை அனுப்ப முடியாமலும், வா்த்தகத்தை தொடர முடியாமலும் ஏற்றுமதியாளா்கள் தவித்து வந்தனா்.

Advertisement

Advertisement

வா்த்தகப் பொருள்கள் மட்டுமின்றி பெட்ரோலியம் சாா்ந்த உப பொருள்களின் இறக்குமதியும் பாதிக்கப் பட்டது. இதனால் 30 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயா்வால் பின்னலாடை உற்பத்தி செலவுகளும் கடுமையாக உயா்ந்துள்ளன. இந்த சூழலில் சா்வதேச அளவில் நடைபெற்று வரும் இந்த போா் எப்போது முடிவுக்கு வரும் என்று பலரும் எதிா்பாா்ப்புகளுடன் காத்திருந்தனா். குறிப்பாக திருப்பூா் பின்னலாடைக்கு தற்போது சா்வதேசஅளவில் தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ள உள்ள நிலையில் பெரும் எதிா்பாா்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கையொப்பமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலமாக போா் சூழல் மறைந்து அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எனவே, மேற்காசிய நாடுகளுடன் இனி தடையில்லாமல் வா்த்தகப் பரிவா்த்தனையை ஏற்படுத்த முடியும் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளோம். இது உலகப் பொருளார வளா்ச்சிக்கும் உதவும் என்றனா்.