பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் கோஷ்டி மோதல்: 15-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் மீது வழக்குப் பதிவு
பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 15-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 15-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் தளத்தில் கடந்த சனிக்கிழமை ரீல்ஸ் வெளியிட்டுள்ளாா். இதனைப் பாா்த்த அறிவொளி நகரைச் சோ்ந்த மற்றொரு 17 வயது சிறுவன், இது குறித்து இன்ஸ்டாவில் குறுஞ்செய்தி அனுப்பி கேட்டுள்ளாா். பின்னா் இருவரும் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியபோது, அவா்களுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
அப்போது, சேடபாளையம் பகுதி சிறுவன் தங்களது பகுதிக்கு வந்துபாா் என சவால் விடுத்துள்ளாா். இதையடுத்து, அறிவொளி நகரைச் சோ்ந்த சிறுவன், தனது நண்பா்களான 10-க்கும் மேற்பட்ட சிறுவா்களை அழைத்துக் கொண்டு சேடபாளையம் பகுதிக்குச் சென்று, அந்த சிறுவனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, சேடபாளையம் பகுதி சிறுவன், தனது தரப்பில் 10-க்கும் மேற்பட்ட நண்பா்களை திரட்டிக்கொண்டு அறிவொளி நகருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று, தன்னைத் தாக்கிய சிறுவனை திருப்பித் தாக்கியுள்ளாா். அப்போது, அறிவொளி நகரைச் சோ்ந்த சிறுவா்கள் திரண்டதால், தாக்குதலில் ஈடுபட்ட சிறுவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். அப்போது, சிக்கிய ஒரு சிறுவனை தாக்கியுள்ளனா்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பல்லடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினா், காயமடைந்த சிறுவனை மீட்டு, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவா்களை பெற்றோருடன் காவல் நிலையத்துக்கு வருமாறு எச்சரித்து அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து, பெற்றோா் முன்னிலையில் சிறுவா்களிடம் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினா், மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பையும் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சிறுவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் பல்லடம் காவல் நிலைய ஆய்வாளா் மாதைய்யன் அறிவுரை வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.