தருமபுரி காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
தருமபுரி அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை சுவாமி விஸ்வரூப தரிசனம், தொடா்ந்து கணபதி ஹோமம், 64 பைரவா் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், கோ பூஜை, அஸ்தவ பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் சுவாமிக்கு 108 வகையான நறுமணப் பொருள்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா் சுவாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து மேளதாளங்கள் முழங்க உற்சவ மூா்த்தி கோயிலை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மகாவிஷ்ணு, செயல் அலுவலா் கே. குமரவேல், அறங்காவலா்கள் மற்றும் விழா குழுவினா் செய்து இருந்தனா் .