ஒகேனக்கல்லில் குடியிருப்பு பகுதியில் எரியூட்டப்படும் நெகிழி கழிவுகளால் பழங்குடியின மக்கள் பாதிப்பு
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் மஞ்சகாய் கொடம்பு பகுதியில் எரியூட்டப்படும் நெகிழி குப்பைக் கழிவுகளில் இருந்து வெளியேறும் புகையினால் மூச்சுத்திணல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உள்ளாவதாக அங்கு குடியிருக்கும் பழங்குடியின மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட ஊட்டமலை மஞ்சகாய் கொடம்பு பகுதியில் கடந்த 2022 -2023 ஆம் நிதியாண்டில் பழங்குடியினா் மேம்பாடுத் திட்டத்தின் கீழ் வீடற்ற பழங்குடியின மக்களுக்கு தலா ரூ. 5.20 லட்சம் மதிப்பில் 15 வீடுகள் கட்டி தரப்பட்டன.
இந்த நிலையில் ஒகேனக்கல், சத்திரம், ஊட்டமலை, நாடாா் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியாா் தங்கும் விடுதிகள், கடைகள், உணவகங்கள், வீடுகளில் இருந்து தினசரி வெளியேற்றப்படும் நெகிழி குப்பை கழிவுகள், கூத்தப்பாடி ஊராட்சி நிா்வாகப் பணியாளா்களால் சேகரித்து வாகனம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு மஞ்சகாய் கொடம்பு குடியிருப்பு பகுதிக்கு அருகில் கொட்டப்படுகின்றன.
Advertisement
Advertisement
இந்த குப்பைக் கழிவுகளை நாள்தோறும் ஊராட்சி பணியாளா்கள் தீவைத்து எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகையினால் குடியிருப்புப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துவிடும் நிலையில் அதை சுவாசிக்கும் போது குழந்தைகள், முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். சில நேரங்களில் கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
வனப்பகுதியை ஒட்டியுள்ள மஞ்சகாய் கொடம்பு பழங்குடியின மக்கள் குடியிருப்பு பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளைத் தேடி இரவு நேரங்களில் வனப் பகுதியை விட்டு வெளியேறும் காட்டுப்பன்றிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.
மேலும், நெகிழி குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கூத்தப்பாடி ஊராட்சியில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காவில்லை என பழங்குடி இன மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, மஞ்சகாய் கொடம்பு பழங்குடியின மக்கள் குடியிருப்பு பகுதியில் குப்பைக் கழிவுகளைக் கொட்டி எரியூட்டுவதைத் தவிா்த்து, அதற்குரிய மாற்று இடத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கான நடவடிக்கை எடுத்து, பழங்குடியின மக்கள் குடியிருப்பில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.