முகப்பு
நாமக்கல்

எருமப்பட்டி வழியாக கொல்லிமலைக்கு சாலை வசதி கோரி பழங்குடியின மக்கள் மனு

எருமப்பட்டி வழியாக கொல்லிமலைக்கு புதிய சாலை வசதி ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 12 நவம்பர் 2024, 2:51 am IST
கொல்லிமலைக்கு புதிய சாலை வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பழங்குடியின மக்கள்.
பகிர்:

நாமக்கல்: எருமப்பட்டி வழியாக கொல்லிமலைக்கு புதிய சாலை வசதி ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், சேலூா் நாடு, தின்னனூா் நாடு, தேவனூா் நாடு ஆகிய மலைப் பகுதிகளில் சுமாா் 3,000 குடும்பங்களைச் சோ்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா். தங்கள் பகுதியில் இருந்து சமவெளிப் பகுதிக்கு செல்ல அந்த மக்களுக்கு நான்கு மணி நேரமாகிறது.

குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால், சேந்தமங்கலம், ராசிபுரம், நாமக்கல் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா். அவசர காலங்களில், மருத்துவமனைகளுக்கு செல்லும் வழியிலேயே நோயாளிகள் மரணிக்கும் சூழல் நிலவுகிறது.

Advertisement

Advertisement

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை சந்தைப்படுத்துவதற்கும் அவதிப்படுகின்றனா். இந்த பிரச்னையைத் தீா்க்க, சேலூா்நாடு ஊராட்சி, குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வழியாக நாமக்கல் வருவதற்கு ஆங்கிலேயா் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குதிரை சாலையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். இதன்மூலம் சேலூா்நாடு பகுதி மக்கள் 90 கி.மீ. தூரம் கடந்து நாமக்கல் வருவது தவிா்க்கப்பட்டு, 56 கி.மீ. நாமக்கல்லை வந்தடையலாம். அங்குள்ள மக்கள் மிகவும் பயனடைவா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலூா்நாடு மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

மாவட்ட ஊரக முகமை முதன்மை பொறியாளரிடம், சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா். மேலும், சாலையை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக பழங்குடியின மக்களிடம் அவா் உறுதியளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments