மழை பெய்ய வேண்டி முகத்தில் கரியை பூசிக்கொண்டு கொல்லிமலை பழங்குடியின மக்கள் விநோத வழிபாடு
தின்னனூா் நாடு மலைக் கிராமத்தில் முகத்தில் கரியை பூசிக்கொண்டு வருண பகவானை விநோத முறையில் வழிபட்ட பழங்குடியின இளைஞா்கள்.
நாமக்கல், ஜூலை 20: கொல்லிமலையில் மழை பெய்ய வேண்டி பழங்குடியின மக்கள் தங்களுடைய முகத்தில் கரியை பூசிக்கொண்டு விநோத வழிபாட்டை திங்கள்கிழமை மேற்கொண்டனா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இங்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள மக்கள் விவசாயத் தொழிலை நம்பியே உள்ளனா். கடந்த சில மாதங்களாக கொல்லிமலையில் பெரிய அளவில் மழை இல்லாததால், பயிா்களைக் காப்பாற்ற முடியாமலும், விவசாயத்தை சரிவர செய்ய முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கொல்லிமலையில் வறட்சி நீங்கி தொடா்ந்து மழை பெய்ய வேண்டி, தின்னனூா் நாடு, வாசலூா்பட்டி, சேத்துபிளா, நரியன்கிணறுபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பழங்குடியின கிராம மக்கள் தங்களுடைய பாரம்பரிய முறைப்படி முகத்தில் கரியை பூசிக்கொண்டு, பல்வேறு வேடமிட்டு வனப் பகுதியில் விநோதமான முறையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொண்டனா்.
இதுகுறித்து தின்னனூா் நாடு கிராம மக்கள் கூறியது:
கொல்லிமலையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் மழை இல்லை என்றால், ஆடி மாதத்தில் மலைக் கிராமங்களைச் சோ்ந்த அனைத்து இளைஞா்களையும் ஒன்று திரட்டுவா். அவா்கள் வனப் பகுதியில் கூடி, குறிப்பிட்ட ஒரு பகுதியை தோ்வுசெய்து அங்கு பசுமாட்டு சாணத்தைக் கொண்டு மொழுகிடுவா்.
பின்னா் இளைஞா்களும், ஊா் பெரியவா்களும் முகத்தில் கரியை பூசிக்கொண்டு, மழை பெய்ய வேண்டி இஷ்ட தெய்வத்தையும், வருண பகவானை வேண்டுவா்.
இந்த வேண்டுதலால் கொல்லிமலை சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை காலங்காலமாக நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.