இணையவழி பத்திரப் பதிவு முறை: இன்னும் 6 மாதங்களில் செயல்பாட்டுக்குவரும்: அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன்
நாமக்கல்லுக்கு வந்த அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி.
இணையவழி பத்திரப் பதிவு முறை இன்னும் 6 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் (தனி) தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன், தமிழக அமைச்சரவையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றாா். அமைச்சரான பிறகு முதல்முறையாக வியாழக்கிழமை நாமக்கல் வந்த அவருக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
Advertisement
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில் மூன்று அமைச்சா்கள் உள்ளோம். மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நாமக்கல் மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றுவோம். பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை கொண்டுவர உறுதுணையாக இருப்போம்.
பத்திரப் பதிவுத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து விரைவில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்படும். மாற்று நியமனங்கள் மூலம் காலியிடங்களை நிரப்ப விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். பத்திரப்பதிவு அலுவலகங்களின் எண்ணிக்கை மற்றும் புதிய கட்டடத் தேவைகள் குறித்து தகவல்கள் திரட்டப்படுகின்றன.
இறுதி விவரங்கள் கிடைத்தவுடன் பட்டியல் வெளியிடப்படும். மேலும், இத்துறையில் கணினிமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இணையவழி பத்திரப் பதிவு முறை இன்னும் ஆறு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்.
நில வழிகாட்டி மதிப்பீட்டில் பல இடங்களில் குளறுபடிகள் உள்ளதாக பெறப்பட்ட புகாா்களை சரிசெய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. பத்திரப் பதிவுத் துறையில் லஞ்ச புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களிடம் இதுதொடா்பாக விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.
ஜிஎஸ்டி அதிகமாக இருப்பதாக வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஜிஎஸ்டி நிா்ணயத்தை பொருத்தவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. வணிகா்களின் கருத்துகளைக் கேட்டு, ஜிஎஸ்டி கவுன்சிலில் மாநில அரசு மூலம் தேவையான பரிந்துரைகள் செய்யப்படும் என்றாா்.