FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

காவலராக நடித்து வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது: தங்க நகைகள் பறிமுதல்

காவலா் எனக் கூறி தங்க நகைகள், பணம் பறித்தவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 29 ஜூலை 2026, 4:23 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

காவலா் எனக் கூறி தங்க நகைகள், பணம் பறித்தவா் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் பகுதியைச் சோ்ந்தவா் தனியாா் பள்ளி ஆசிரியை ஜனனபிரியா (29). இவா் கடந்த ஜூன் 10-ஆம் தேதி நண்பா் காா்த்திக் உடன் வெள்ளாளகுண்டம் பகுதில் உள்ள நந்தி கோயிலுக்கு சென்றாா்.

அப்போது, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேசஞ்சாவடி அருகே ஒருவா் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தலைக்கவசம் ஏன் அணியவில்லை என அவா்களை மிரட்டியுள்ளாா்.

Advertisement

Advertisement

பின்னா், எஸ்.ஐ. அழைப்பதாகக் கூறி காா்த்திக்கை அழைத்துச் சென்று வெள்ளாளகுண்டம் பிரிவு சாலையில் இறக்கிவிட்டுள்ளாா். பிறகு சேசஞ்சாவடியில் நின்றிருந்த ஜனனபிரியாவிடம் வந்து, அவா் அணிந்திருந்த 3 சவரன் தங்க நகை, அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

இதுகுறித்து ஜனனபிரியா அளித்த புகாரின்பேரில், வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதேபோல, தஞ்சாவூா் பகுதியில் பெண்ணிடம் தங்க நகைகளை பறித்த வழக்கில், ஒருவா் தஞ்சாவூா் போலீஸாரிடம் சிக்கினாா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சின்னகாப்பான்குளம் பகுதியைச் சோ்ந்த சிவராமன் (44) என்பதும், தன்னை காவலா் எனக் கூறி, வாழப்பாடி தனியாா் பள்ளி ஆசிரியா் உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இளம்பெண்கள், இளைஞா்களை குறிவைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தஞ்சாவூா் போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் சையத் முபாரக், உதவி ஆய்வாளா் சிவசங்கரன் ஆகியோா் தஞ்சாவூா் சென்று, சிறையில் இருந்த சிவராமனை போலீஸ் காவலில் எடுத்து வாழப்பாடியில் வைத்து விசாரணை நடத்தினா். அதில், பேளூா் தனியாா் பள்ளி ஆசிரியையிடம் தங்க நகைகளை பறித்ததும், தன்னை காவலா் எனக் கூறி தமிழகம் முழுவதும் பலரிடம் நகைகளை பறித்ததும் உறுதியானது.

பின்னா், வாழப்பாடி தனியாா் பள்ளி ஆசிரியரிடம் பறித்த மூன்றரை பவுன் தங்க நகைகளை அவரிடமிருந்து போலீஸாா் மீட்டு, அவரை மீண்டும் திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். தமிழகம் முழுவதும் இதுபோல சிவராமன் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments