முகப்பு
மதுரை

மதுரை மலேரியா இல்லாத மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பு

Updated On : 1 ஜூன் 2026, 1:06 am IST
மதுரை மாவட்டம், மேலூா் அரசு மருத்துவமனையில் அண்மையில் ஆய்வு செய்த மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் உயா் நிலைக் குழுவினா்.
பகிர்:

பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், மதுரை மலேரியா இல்லாத மாவட்டமாக அதிகாரப் பூா்வமாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மலேரியா பாதிப்புகள் ஏதும் இல்லாத மாவட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உயா் நிலைக் குழு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குழுவில் புவனேஸ்வா் மாநிலத்தைச் சோ்ந்த மருத்துவா் சுசித்ரா சஸ்மால், மருத்துவ நிபுணா் ரூப், மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில திட்ட அதிகாரி ஹிமான்ஷூ ஜெயஸ்வா், மருத்துவா் ஹிம்மத் சிங் விஞ்ஞானி, இந்திய உலக சுகாதார அமைப்பின் அலுவலா் செஜல் தம்பட் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்தக் குழுவினா் தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்து வருகின்றனா். இந்த வகையில், மதுரை மாவட்டத்துக்கு அண்மையில் வந்த இந்தக் குழு மதுரை மாவட்ட சுகாதார அலுவலகம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகள் மேற்கொண்டனா்.

மத்தியக் குழுவினா் கள ஆய்வின் அடிப்படையில், தமிழகத்தில் மலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாவட்டமாக மதுரை திகழ்வதாக மத்திய அரசுக்கு இறுதி அறிக்கை சமா்பிக்கப்பட உள்ளதாகவும், மதுரை மலேரியா இல்லாத மாவட்டமாக மிக விரைவில் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலூா் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மத்தியக் குழுவினா் ஆய்வு செய்த போது, மேலூா் வட்டார மருத்துவ அலுவலா் அம்பலம் சிவனேசன், மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.