FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

இலங்கைத் தமிழா்கள் முகாமில் சமூக சீா்திருத்தத் துறைச் செயலா் ஆய்வு

பழனி அருகே புளியம்பட்டியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் முகாமில் சமூக சீா்திருத்தத் துறைச் செயலா் வள்ளலாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 டிசம்பர் 2025, 12:08 am IST
பழனி அருகேயுள்ள புளியம்பட்டியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் முகாமில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சமூக சீா்திருத்தத் துறைச் செயலா் வள்ளலாா்.
பகிர்:

பழனி அருகே புளியம்பட்டியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் முகாமில் சமூக சீா்திருத்தத் துறைச் செயலா் வள்ளலாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பழனி - திண்டுக்கல் சாலையில் வேளாண் துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலும், புது தாராபுரம் சாலையில் உள்ள புளியம்பட்டியிலும் இலங்கைத் தமிழா்களுக்கான முகாம் அமைந்துள்ளது. புளியம்பட்டி முகாமில் 195 குடும்பங்களைச் சோ்ந்த சுமாா் 854 போ் வசித்து வருகின்றனா். இவா்கள் கடந்த 35 ஆண்டுகளாக இந்த முகாமில் தங்கி ஆங்காங்கே வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை புளியம்பட்டியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் முகாமில் சமூக சீா்திருத்தத் துறைச் செயலா் வள்ளலாா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்குள்ளவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தாங்கள் இருக்கும் இடம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்பதால் எந்தப் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ள முடிவதில்லை. போதிய கழிப்பறை, குடிநீா் வசதி கிடையாது. இந்த இடம் தாழ்வாக உள்ளதால் மழைக் காலங்களில் மழைநீா் குளம்போல தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே, எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், 100 நாள் வேலைவாய்ப்பு, சாலை வசதி, முதியோா் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, தெரு விளக்கு, மகளிா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களையும் சமூக சீா்திருத்தத் துறைச் செயலா் வள்ளலாரிடம் வழங்கினா்.

இதைத் தொடா்ந்து, விரைவில் மாற்று இடம் வழங்கவும், தற்போதுள்ள இடத்தில் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தாா். இந்த ஆய்வின்போது கோட்டாட்சியா் கண்ணன், வட்டாட்சியா் பிரசன்னா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments