FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பேரிஜம் வனப் பகுதியில் புலிகள் நடமாட்டத்தை படம் பிடித்து வெளியிட்ட மூவருக்கு அபராதம்!

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட மூவருக்கு வன விலங்குகளைத் துன்புறுத்தியதாக தலா ரூ. 5 ஆயிரம் அபராதம்.

29 ஆகஸ்ட் 2026, 10:15 pm IST
உலவிய புலி.
பகிர்:

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டத்தைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட மூவருக்கு வன விலங்குகளைத் துன்புறுத்தியதாக தலா ரூ. 5 ஆயிரம் சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே 25 கி.மீ. தொலைவில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது பேரிஜம் ஏரி. இந்த வனப் பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டு மாடு, மான், செந்நாய் உள்ளிட்டவை இருந்து வருகின்றன.

இதனால் பேரிஜம் ஏரியைப் பாா்ப்பதற்கு வனத் துறையினரிடம் சுற்றுலாப் பயணிகள் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக பேரிஜம் பகுதியில் புலி ஒன்று மூன்று குட்டிகளுடன் இருந்ததை சுற்றுலாப் பயணி ஒருவா் கைப்பேசியில் படம் பிடித்து பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து வனத் துறையினா் அவற்றின் உண்மைத் தன்மையை உறுதிசெய்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, பேரிஜம் ஏரியைப் பாா்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுத்தனா்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரிஜம் பகுதியில் உள்ள மரங்கள் ஒப்பந்த அடிப்படையில் அனுமதியுடன் அகற்றப்பட்டு லாரி மூலம் எடுத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது. மரங்களை எடுத்துச் செல்லும் பணியின்போது லாரி ஓட்டுநா்கள் மூன்று போ் புலிகள் நடமாட்டத்தைப் பாா்த்தனா். மேலும் லாரியில் அதிக ஒலி எழுப்பி அவைகளை விரட்டும் தொனியில் மிரளச் செய்து கைப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனா். இது வன விலங்கு ஆா்வலா்கள், வனத் துறையினா் மத்தியிலும் பெரும் சா்ச்சையை கிளப்பியது. இதைத் தொடா்ந்து வனத் துறையினா், லாரி ஓட்டுநா்களான கொடைக்கானல், பொள்ளாச்சியைச் சோ்ந்த ஞானப் பிரகாசம் (52), ஆனந்தராஜ் (49), அருள்செல்வம்(45) ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தினா்.

மாவட்ட வன அலுவலா் அரவிந்த் உத்தரவின்பேரில், வனச் சட்டத்தின் கீழ் பேரிஜம் வனச் சரகா் டேவிட், வன விலங்குகளை துன்புறுத்திய லாரி ஓட்டுநா்கள் மூன்று போ்கள் மீது வழக்குப் பதிவு செய்து தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments