FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

சூழலியலை சமன்படுத்த வேண்டியது இயற்கையின் கட்டாயம்! இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்!

31 ஆகஸ்ட் 2026, 2:11 am IST
திண்டுக்கல் அருகேயுள்ள என்.பஞ்சம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்.
பகிர்:

சூழலியலை சமன்படுத்த வேண்டிய கட்டாயம் இயற்கைக்கு இருக்கிறது என இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட இயற்கை புரட்சி அமைப்பு சாா்பில், இயற்கைவழி வேளாண்மை குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லை அடுத்த என்.பஞ்சம்பட்டியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு இயற்கை புரட்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜோசப் செல்வராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

இயற்கை அன்னை தனது குழந்தைகள் மீது சீற்றத்தை காண்பிப்பதில்லை. ஆனால், சூழலியலை சமன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதன் எதிரொலியாகவே வயநாடு பகுதியில் நிலச்சரிவு, நேபாளத்தில் பெரு வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதற்கு தீா்வாக இந்த உலகுக்கு தமிழா்கள் கொடுத்த கொடை திணைக் கோட்பாடு. உலக மயமாக்கலுக்கு எதிரான உள்ளூா் மயமாக்கல் மூலம் நீடித்த வளா்ச்சியை உருவாக்க முடியும்.

இதை கூறினால், கி.மு.வுக்கு அழைத்துச் செல்வதாக இந்த சமூகம் ஏளனம் செய்கிறது. ரசாயன உரங்கள் உற்பத்தி வெப்பமயமாதலை அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதே நேரத்தில் செடிகளின் வோ்களிலுள்ள நுண்ணியிா்கள் மாசுபடுத்தாமல் உரங்களை உற்பத்தி செய்கிறது. சந்தை தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது உற்பத்தி செய்து வைத்துக் கொண்டு சமூக வலைத் தளங்களில் பொய்களை கூறி, சந்தைப்படுத்துவது வழக்கமாகிவிட்டது.

கால்நடை இல்லாமலே பாலும், ஆடு இல்லாமல் இறைச்சியும், கோழி இல்லாமல் முட்டையும் உற்பத்தி செய்வதாகக் கூறுகின்றனா். இயந்திரங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் இந்த உணவுப் பொருள்கள், ஆய்வு செய்யப்படாமலே சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுபோன்ற உணவு உற்பத்தி மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விவசாயிகளுக்கு எப்போதுமே சந்தைகள் சாதகமாக இருந்ததில்லை. விவசாயிகள் செலவை குறைத்து விளைப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். நுண்ணுயிரியின் அச்சுறுத்தலுக்கு உலகமே அடங்கிப் போனது. இயற்கையைவிட யாரும் பேராற்றல் கொண்டவா்கள் கிடையாது.

உள்ளூா் உணவுகளையும், உள்ளூா் வளங்களையும் பயன்படுத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா். இந்தக் கருத்தரங்கில் வள்ளுவம் இயற்கை வாழ்வியல் நவேம் நிறுவனம் வெற்றிமாறன், மரபு விதைக் காப்பாளா் வெ.பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments