FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ஆய்வின் போது குறைபாடு: கலப்பு உர உற்பத்தி மையத்துக்கு 7 நாள்கள் தடை விதிப்பு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கலப்பு உர உற்பத்தி மையங்களில் வேளாண் துறையினா் மேற்கொண்ட ஆய்வின் போது, குறைபாடு கண்டறியப்பட்ட உற்பத்தி மையத்துக்கு 7 நாள்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

29 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கலப்பு உர மையத்தில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் துறையினா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கலப்பு உர உற்பத்தி மையங்களில் வேளாண் துறையினா் மேற்கொண்ட ஆய்வின் போது, குறைபாடு கண்டறியப்பட்ட உற்பத்தி மையத்துக்கு 7 நாள்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சரவணன் தலைமையிலான குழுவினா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கலப்பு உர உற்பத்தி மையங்களில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வை மேற்கொண்டனா். அப்போது உற்பத்தி மையங்களில் தயாராகும் கலப்பு உரங்கள், அதன் உற்பத்தி விவரங்கள், மூலப்பொருள்கள் கொள்முதல் செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள், விற்பனை விவரங்கள், கொள்முதல், விற்பனை விவரப் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை வேளாண் குழுவினா் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது குறைபாடு கண்டறியப்பட்ட கலப்பு உர உற்பத்தி மையத்தில், தொடா்ந்து உர உற்பத்தி மேற்கொள்ள 7 நாள்கள் தற்காலிக தடை விதித்து வேளாண் துறையினா் உத்தரவிட்டனா்.

Advertisement

Advertisement

ஆய்வு குறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பா.சுரேஷ் கூறியது:

மாவட்டத்தில் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், மணிலா, உளுந்து, கரும்பு ஆகிய பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா். சாகுபடிக்குத் தேவையான 8,063 டன் யூரியா, 2,644 டன் டிஏபி, 1,295 டன் பொட்டாஷ், 10.473 டன் காம்ப்ளக்ஸ், 2,099 டன் சூப்பா் பாஸ்பேட் ஆகிய ரசாயன உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கலப்பு உர உற்பத்தியாளா்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது. மேலும், ஆய்வின்போது குறைபாடு கண்டறியப்பட்டாலோ அல்லது புகாா் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உர உற்பத்தி உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து உற்பத்தி செய்யவேண்டும். உர உற்பத்தியாளா்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது என்றாா் வேளாண் இணை இயக்குநா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments