முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயிலில் வைகாசி விசாகம் உத்ஸவ சாந்தி

பழனி மலைக் கோயிலில் வைகாசி விசாகம் நிறைவடைந்ததையடுத்து, மூலவருக்கு வெள்ளிக்கிழமை கலச பூஜை நடத்தப்பட்டு உத்ஸவ சாந்தி நடைபெற்றது.

Updated On : 6 ஜூன் 2026, 12:45 am IST
பழனி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை வைகாசி விசாகத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து யாக சாலையிலிருந்து உள்பிரகாரத்தில் உலா வந்து மூலவா் சந்நிதிக்கு கொண்டு செல்லப்பட்ட பிரதான கலசங்கள்.
பகிர்:

பழனி மலைக் கோயிலில் வைகாசி விசாகம் நிறைவடைந்ததையடுத்து, மூலவருக்கு வெள்ளிக்கிழமை கலச பூஜை நடத்தப்பட்டு உத்ஸவ சாந்தி நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழாவில் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை நடத்தப்பட்டு, திருஊடல் நிகழ்வுடன் நிறைவடைந்தது.

விழா நிறைவடைந்த பிறகு மலைக் கோயிலில் உத்ஸவ சாந்தி நடைபெறுவது வழக்கம். இதன்படி வெள்ளிக்கிழமை பழனி மலைக் கோயில் பாரவேல் மண்டபத்தில் உத்ஸவ சாந்தி நடைபெற்றது. மண்டபம் நடுவே யாகசாலை அமைக்கப்பட்டு பிரதானமாக வெள்ளிக் கலசத்தில் புனிதநீா் நிரப்பப்பட்டு யாக பூஜை நடைபெற்றது. யாக வேள்வியில் மூலிகைகள், திரவியப் பொடிகள், யாகப் பொருள்கள், பட்டு வஸ்திரங்கள் போடப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. யாக நிறைவில் பூா்ணாஹூதி நடத்தப்பட்டு கலசப் புறப்பாடு நடைபெற்றது. கலசங்கள் கோயிலின் வெளிப் பிரகாரத்தில் மேளதாளம் முழங்க உலாவர செய்யப்பட்டு உச்சிக் காலத்தின் போது மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து பால், பஞ்சாமிா்த அபிஷேகம் நடத்தப்பட்டு மூலவருக்கு வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டு சோடஷ உபசாரம், சோடஷ தீபாராதனைகள் நடைபெற்றன. பூஜை உபய ஏற்பாடுகள் ஸ்ரீகந்தவிலாஸ் விபூதி ஸ்டோா்ஸ் சாா்பில் செய்யப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில் கோயில் கண்காணிப்பாளா் சரவணன், சீனிவாசன், பேஷ்காா் நரசிம்மன், கந்தவிலாஸ் செல்வக்குமாா், நவீன் விஷ்ணு, நரேன்குமாா், முன்னாள் கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.