FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கருப்பணசுவாமி கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

வேடசந்தூா் அருகே கருப்பணசுவாமி கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து சனிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Updated On : 7 ஜூன் 2026, 1:01 am IST
நாகம்பட்டி கருப்பணசுவாமி கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே கருப்பணசுவாமி கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து சனிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டியில் சக்தி விநாயகா், மகாலட்சுமி, மாளம்மாள், மாமுடிசாமி, கருப்பணசுவாமி, சென்னப்பா, பாப்பாத்தி, நாகம்மாள் ஆகிய தெய்வங்கள் அமைந்துள்ள கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 30-ஆம் தேதி பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா்.

இந்த நிலையில், நடுப்பட்டி வீரமுஷ்டி குழுவினரை வரவேற்று ஆடை, வெண்தாமரை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மகாலட்சுமி அம்மன் சக்தி கிணறு சென்றடைந்து, விநாயகா் பூஜையுடன் அம்பு எய்தி, கொடகனாற்றுக்கு அம்மன் ரதத்தில் சென்று நீராட்டு விழா நடைபெற்றது.

Advertisement

Advertisement

அங்கிருந்து மாளம்மாள் கோயிலுக்கு சென்ற பக்தா்கள், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். பின்னா், அம்மன் ரதம், கருப்பணசுவாமி கோயிலைச் சென்றடைந்தது. கோயில் வளாகம் முன் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஈர ஆடையுடன் பக்தா்கள் நீண்ட வரிசையில் அமா்ந்திருந்தனா். அப்போது, கோயில் பூசாரி பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்தாா்.

இந்த விழாவில் திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments