ஜோதிடர் மனைவியிடம் நூதன முறையில் நகை திருட்டு
மதுரை கூடல்நகரில் ஜோதிடர் மனைவியிடம் நூதன முறையில் நகை திருடிச் சென்றவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை கூடல்நகரில் ஜோதிடர் மனைவியிடம் நூதன முறையில் நகை திருடிச் சென்றவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கூடல்நகரில் உள்ள அஞ்சல் நகரை சேர்ந்த ஜோதிடர் முத்துச்சாமி. வீட்டின் மாடியில் ஜோதிட நிலையம் நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த சனிக்கிழமை ஜோதிடம் பார்க்க வந்த 60 வயது நபர், தனக்கு 60-ஆம் திருமணம் நடைபெற உள்ளதாகவும், தனது மனைவியுடன் வந்து தங்களிடம் ஆசிபெற வேண்டும் என்று ஜோதிடரிடம் கூறியுள்ளார்.
பின்னர் திங்கள்கிழமை வந்த அந்த நபர், மாடியில் இருந்த முத்துச்சாமியை சந்தித்து சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் செவ்வாய்க்கிழமை வந்தவர், வீட்டில் இருந்த முத்துச்சாமியின் மனைவி சரோஜாவைச் சந்தித்துள்ளார்.
அப்போது, ஜோதிடருடன் சேர்த்து உங்களைப் புகைப்படம் எடுக்க வேண்டும். உங்களது கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலி சிறியதாக உள்ளது. என்னிடம் உள்ள சங்கிலியை அணிந்து கொள்ளுங்கள் எனக் கூறி, சரோஜா அணிந்திருந்த சங்கிலியை வாங்கியுள்ளார்.
கடந்த 2 நாள்களாக ஜோதிடரைப் பார்க்க வந்து சென்ற நபர் என்பதால் அவர் கூறியதை சரோஜா நம்பி விட்டார். பின்னர் புதிய சேலை அணிந்து வருமாறு சரோஜாவிடம் அந்த நபர் கூறியுள்ளார். அதையும் நம்பி வீட்டுக்குள் சென்று சேலை அணிந்து வந்து பார்த்தபோது, அந்த நபரைக் காணவில்லை. அதன் பிறகே கவரிங் நகையைக் கொடுத்து தான் ஏமாற்றப்பட்டது சரோஜாவுக்கு தெரியவந்தது.
தனது 3 பவுன் சங்கிலி பறிபோனது குறித்து கூடல்புதூர் காவல் நிலையத்தில் சரோஜா புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.