மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது விபத்து: ஒருவர் பலி
மதுரையில் நினைவு வளைவு விழுந்ததில் ஒருவர் பலியானது பற்றி...
மதுரையில் நக்கீரர் நினைவு வளைவை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் பொக்லைன் ஓட்டுநர் புதன்கிழமை நள்ளிரவு பலியானார்.
மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் வெளிபுறம் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் முன்பு, போக்குவரத்து நிறைந்த மேலூர் சாலையில் உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டின் போது, மதுரையில் அமைக்கப்பட்ட நக்கீரன் தோரணவாயில் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு மேலூர் சாலை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அகலப்படுத்தப்பட்டது. அப்போது இந்த தோரணவாயிலை இடிக்க, சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கும் தொடர்ந்தனர்.
Advertisement
ஆனால் போக்குவரத்து நெரிசலைக் கருதி அதனை இடிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, புதன்கிழமை நள்ளிரவு அதனை இடிக்கும் பணி தொடங்கியது.
இடிக்குபோது எதிர்பாராத விதமாக, தோரணவாயில் ஜேசிபி இயந்திரம் மேல் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த ஜேசிபி ஆப்ரேட்டர் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒப்பந்ததாரர் நல்லதம்பி இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், நாகலிங்கம் உடலை மீட்டு அமரர் ஊர்தி மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இச்சம்பவம் மாட்டுத் தாவணி பேருந்து நிலைய பகுதியில் பரபரப்பையும், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.