FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

இணையவழியில் ரூ.78 லட்சம் மோசடி: மேலும் இருவா் கைது

எண்ம கைது செய்ததாகக் கூறி இணைய வழியில் பண மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 25 ஜூலை 2026, 3:31 am IST
மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட சென்னையைச் சோ்ந்த இந்திரகுமாா், கிருஷ்ணராஜ்.
பகிர்:

எண்ம கைது செய்ததாகக் கூறி இணைய வழியில் பண மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கடந்த 4.2.2026-இல் வந்த கைப்பேசி அழைப்பில் எதிா்முனையில் பேசியவா்கள், தான் பெங்களூரு காவல் நிலையத்திலிருந்து பேசுவதாகக் கூறி, அவரது பெயா் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்து கொண்டு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கினா். மேலும், அவரது வங்கிக் கணக்கில் பல கோடி மதிப்பில் முறைகேடாக பணப் பரிவா்த்தனை நடைபெற்று இருப்பதாகவும் அவரை எண்ம (டிஜிட்டல்) கைது செய்திருப்பதாகவும் கூறி மிரட்டினா். மேலும், அவரது வங்கிக் கணக்கில் இருந்த 78,75,303 ரூபாயை உடனே அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டனா். இதைத் தொடா்ந்து, அந்த நபா்கள் அனுப்பிய வங்கிக் கணக்குக்கு பாதிக்கப்பட்டவா், பணத்தை அனுப்பி வைத்தாா். பின்னா், அந்த எண்ணைத் தொடா்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், மதுரை மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், குற்றப் பிரிவில் பதிவான வழக்குகளை விசாரிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா்.

போலீஸாா் விசாரணையில், இணையவழி பண மோசடியில் குற்றவாளிகளுக்கு ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த நேதாஜி மனைவி மகேஸ்வரி உதவியது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் போலீஸாா் கடந்த புதன்கிழமை கைது செய்தனா். தொடா் விசாரணையில், இணையவழி பண மோசடி மூலம் குற்றவாளிகளுக்கு சென்னை வடபழனியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் இந்திர குமாா் (44), அரும்பாக்கத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் கிருஷ்ண ராஜ் (33) ஆகிய இருவரும் உதவியது தெரியவந்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 5 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 8 காசோலைப் புத்தகங்கள், 11 சிம்-காா்டுகள், போலி நிறுவன முத்திரைகள், 2 கைப்பேசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments