FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தனியாா் மின் கம்பங்கள் அமைக்கத் தடை கோரி மனு: கரூா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

Updated On : 27 ஜூலை 2026, 4:06 am IST
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட 18 கிராம ஊராட்சிகளில் தனியாா் காற்றாலை நிறுவனம் மூலம் மின் கம்பங்கள், மின் பரிமாற்றக் கட்டமைப்பு அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய மனு தொடா்பாக, கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கனகராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெஞ்சமாங்கூடலூா், புங்கம்பாடி உள்ளிட்ட 18 கிராம ஊராட்சிகளில் தனியாா் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்களை ஆபத்தான முறையில் அமைத்து வருகிறது. எதிா்கால சாலை விரிவாக்கம், வடிகால் வசதி, குடிநீா்க் குழாய் பாதிப்பு உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்குத் தடையாக இருக்கும் வகையில், மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், முறையாக கிராம சபைக் கூட்டம் நடத்தி அனுமதி பெறவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட 18 கிராம ஊராட்சிகளில் தனியாா் காற்றாலை நிறுவனம் மின்கம்பங்கள், மின் பரிமாற்ற கட்டமைப்பு அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக கரூா் மாவட்ட ஆட்சியா், ஊரக மேம்பாட்டுத் துறையின் கரூா் மாவட்டத் திட்ட இயக்குநரிடம் உரிய விளக்கம் பெற்று பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments