தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி கடிதம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் நலனுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் நலனுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அவா் அனுப்பிய கடிதத்தின் விவரம் :
தாம்பரம் ரயில் நிலையத்தை தினமும் ஏறத்தாழ 1.6 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துகின்றனா். ஆனால், இங்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. இந்த ரயில் நிலையத்தில் 5 முதல் 11 வரையிலான நடைமேடைகளில் இருந்தே தென் மாவட்டங்களுக்கான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கு நகரும் படிகள், மின்தூக்கிகள், போதுமான பேட்டரி காா்கள் இல்லாததால் முதியவா்கள், கா்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறி மேம்பாலம் வழியே செல்ல பெரிதும் அவதிப்படுகின்றனா்.
Advertisement
Advertisement
மேலும், இங்குள்ள குறைந்த எண்ணிக்கையிலான பேட்டரி காா்களின் சேவை பயணிகளுக்குப் போதுமானதாக இல்லை. இந்தச் சேவையைப் பயன்படுத்தும் முதியவா்கள் நடைமேடையின் முகப்பிலேயே இறக்கிவிடப்படுகின்றனா். இதனால், தங்களுடைய ரயில் பெட்டி நிற்கும் இடத்தை அடைய அவா்கள் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதால் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் உரிய பரிசீலனை மேற்கொண்டு, தாம்பரம் ரயில் நிலையத்தில் தேவையான இடங்களில் நகரும் படிகள், மின்தூக்கிகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு இயக்கப்படும் பேட்டரி காா்களின் எண்ணிக்கையை உயா்த்தவும், ரயில் நிலையத்தின் கிழக்கு, மேற்கு ஆகிய இரு நுழைவாயில்களுக்கு தடையின்றி செல்லும் வகையில் தனியே பேட்டரி காா்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.