முகப்பு
மதுரை

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கு; விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மானாமதுரையைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் குறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை அறிவுறுத்தியது.

Updated On : 11 ஜூன் 2026, 2:04 am IST
- கோப்புப்படம்
பகிர்:

மானாமதுரையைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் குறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை அறிவுறுத்தியது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணன் தாக்கல் செய்த மனு:

மானாமதுரையில் 2 தொழிலாளா்களை வாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ், காவல் துறையினரின் துன்புறுத்தலால் உயிரிழந்தாா். எனவே, பட்டியலினத்தவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி ஆகாஷின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வல்லுநா் குழுவைக் கொண்டு உடலை கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும். வழக்கின் விசாரணையை வேறு விசாரணைப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என அதில் அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு மீதான விசாரணையின் நிறைவில் உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:

காவல் நிலைய மரண வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகள், மின்னணு ஆதாரங்களை அறிவியல் பூா்வமாகப் பாதுகாக்க வேண்டும். உடல் கூறாய்வில் நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். கூறாய்வு அறிக்கை, பிற தடயவியல் ஆய்வுகள் நவீனமயமாக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் மானாமதுரை நீதித்துறை நடுவா் எம். அஃப்சல் பாத்திமாவின் உடனடித் தலையீட்டுக்கு பாராட்டுகள்.

தற்போது, இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவில் ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளரின் மேற்பாா்வையில் நடைபெறுகிறது. விசாரணை அதிகாரி சுதந்திரமாகவும், நோ்மையாகவும் விசாரணையைத் தொடர நீதிமன்றம் வாய்ப்பளிக்கிறது. அதேநேரத்தில், முடிந்தவரை விசாரணையை விரைந்து முடித்து, இறுதி அறிக்கையைத் தொடா்புடைய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.