வைகையாற்றில் மணல் குவாரி நடத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை
சிவகங்கை மாவட்டம் டி.புதுக்கோட்டை வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் டி.புதுக்கோட்டை வைகையாற்றில் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஜி.மணிமாறன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு:
வைகை ஆற்றில் பார்த்திபனூர் மதகு அணை மற்றும் கீழப்பெருங்கரை தடுப்பு அணைக்கு இடைப்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே மணல் அள்ளப்பட்டது. இதனால் மதகு அணையும், தடுப்பு அணையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கும், ராமநாதபுரம், முதுகுளத்தூர் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதற்கான கால்வாய்களும் உள்ளன. மேலும் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் டி.புதுக்கோட்டையில் வைகையாற்றில் கீழப்பெருங்கரை தடுப்பு அணை அருகே மீண்டும் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது குவாரி நடைபெறும் இடம் கீழப்பெருங்கரை நீரேற்று நிலையத்தின் மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு மிக அருகில் மயானம், அரசு பள்ளியும் உள்ளன.
இப்பகுதியில் பொதுமக்கள், கால்நடைகள் செல்வதற்காக கால்வாயில் 15 அடி அகலத்துக்கு அரசு சார்பில் இரு பாலங்கள் கட்டப்பட்டன. முந்தைய மணல் குவாரியின் போது மணல் லாரிகள் சென்றதால் இரு பாலமும் பலத்த சேதம் அடைந்துள்ளது. தற்போது மணல் லாரிகள் இந்த பாலங்கள் வழியாக செல்ல அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இதனால் பாலங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளது. கீழ்நிலை அதிகாரிகள் வழங்கிய அறிக்கையை நம்பி, கள ஆய்வு செய்யாமல் மணல் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் தவறான தகவல்களை அளித்து மணல் குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது.
இதனால் டி.புதுக்கோட்டை வைகையாற்றில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், பார்த்திபனூர் மதகு அணை, கீழப்பெருங்கரை தடுப்பு அணை இடையே மணல் குவாரி நடத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சிவகங்கை மாவட்டம் டி.புதுக்கோட்டை வைகையாற்றில் மணல் குவாரி நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.