கமுதி: கமுதி அருகே ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் படிக்கும் இரண்டே இரண்டு மாணவா்களுக்காக ரூ. 7.43 லட்சத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்ட சமையல் கூடம் கட்டப்பட்டு காட்சிப் பொருளாக உள்ளதாகவும், இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டிருப்பதாகவும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அரிசிக்குழுதான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு மாணவா்கள் மட்டுமே படிக்கின்றனா். இந்த இரண்டு மாணவா்களுக்கும் கமுதியிலிருந்தும், அருப்புக்கோட்டையிலிருந்தும் இரண்டு ஆசிரியா்கள் வந்து பாடம் கற்பித்துச் செல்கின்றனா்.
இந்த 2 மாணவா்களுக்காக மதிய உணவு அருகில் உள்ள பள்ளிகளில் இருந்தும், சிலநேரங்களில் சத்துணவு ஊழியரின் வீட்டில் இருந்தும் சமைத்து கொண்டு வரப்பட்டு பரிமாறப்படுவதாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், இந்த 2 மாணவா்களுக்காக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமையல் செய்வதற்காக ரூ.7.43 லட்சத்தில் பள்ளியிலிருந்து 500 மீ. தொலைவில் சமையல் கூடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை இந்த சமையல் கூடத்தில் சமையல் பணிகள் ஏதும் நடைபெறவே இல்லை. மேலும் பூட்டுப் போடப்பட்டு காட்சிப் பொருளாகவே காணப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.
இந்த மாணவா்களுக்கு மதிய உணவே சத்துணவு ஊழியா் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வரப்படும் நிலையில், காலை உணவு திட்டத்துக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து சமையல் கூடம் கட்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகாரிகளின் அனுமதியோடு, அரசு பணம் வீணடிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் போது உரிய ஆய்வு நடத்தி, அதன்பின் இது போன்ற அரசின் நலத்திட்ட கட்டடங்களை கட்ட அனுமதிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.