முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே புதன்கிழமை நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

Updated On : 20 செப்டம்பர் 2024, 12:23 am IST
பகிர்:

கச்சத்தீவு அருகே புதன்கிழமை நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 323 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது புட்டிகள், கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினா். இதனால், பல லட்சம் ரூபாய் இழப்புடன் ராமேசுவரம் மீனவா்கள் வியாழக்கிழமை கரைக்குத் திரும்பினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவா்கள் கூறியதாவது:

கச்சத்தீவு அருகே அண்மைக்காலமாக மீன் பிடிக்கச் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு விசைப் படகுக்கும் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்கிறோம்.

இலங்கைக் கடற்படையினரின் தொடா் தாக்குதலால் பல நேரங்களில் மீன் பிடிக்க முடியாமல் திரும்பும் நிலை ஏற்படுகிறது. இதேபோல, புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் கற்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் வீசினா். இதனால், பல லட்சம் ரூபாய் இழப்புடன் கரைக்குத் திரும்பினோம்.

மீனவா்கள் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.