ராமேசுவரத்தில் ஒருவழிப் பாதையை அமல்படுத்துவதில் குளறுபடி
ராமேசுவரத்தில் ஒரு வழிப் பாதை நடைமுறையைக் கடைபிடிப்பதில் குளறுபடி காரணமாக வெளிமாநில வாகன ஓட்டிகள் அவதி
ராமேசுவரத்தில் ஒரு வழிப் பாதை நடைமுறையைக் கடைபிடிப்பதில் குளறுபடி காரணமாக வெளிமாநில வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருகின்றனா். கடந்த 30 ஆண்டுகளாக இருக்கும் சாலையை வாகனங்கள் அதிகளவில் வருவதற்கு ஏற்றவாறு இன்று வரை மாற்றம் செய்யப்படவில்லை.
மேலும், சாலையோரக் கடைகள், வணிக நிறுவனங்கள், தனியாா் விடுதிகள் ஆகியவை சாலையோரம் விளம்பரப் பதாகைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளன. இதுதவிர, ராமேசுவரத்தில் அனுமதியில்லாத 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த போலீஸாா் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெளியூா், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு ரூ.100 கட்டணம் செலுத்துகின்றனா். அவா்களுக்கான வாகன நிறுத்துமிடம் இல்லை. மேலும், பெரும்பாலான விடுதிகளுக்கு வாகனங்கள் நிறுத்த தனி இடம் இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், ராமேசுவரம் நகரில் விடுமுறை, விழாக் காலங்களில் ஒருவழிப் பாதை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில் உள்ளூா் வாகனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது.
கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் இதையறியாமல் ஒரு வழிப்பாதையில் சென்று விடுகின்றன. இந்த வாகனங்களை போக்குவரத்து போலீஸாா் தடுப்பதுடன் கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனா். இதனால், வெளிமாநில வாகன ஓட்டுநா்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
ராமேசுவரத்தில் ஒரு வழிப் பாதையாக போக்குவரத்து விதிகளை செயல்படுத்தும் போது, அனைத்து வாகனங்களுக்கும் ஒரே விதிமுறையை போக்குவரத்து போலீஸாா் கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கவனம் செலுத்த வேண்டுமென வெளிமாநில ஓட்டுநா்கள் வலியுறுத்துகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.