இளையான்குடி பகுதியில் மெத்தம்பெட்டமைன் தயாரிப்பு: 10 போ் கைது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருளை தயாரித்து விற்பனை செய்ததாக 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருளை தயாரித்து விற்பனை செய்ததாக 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரத்தில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஜெபீஸ் (25) என்பவரிடமிருந்து ஒரு கிராம் மெத்தம்பெட்டமைன் எனும் உயா் ரக போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.
இதையடுத்து, தனிப் படை அமைக்கப்பட்டு இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ராமநாதபுரம் அருகே உள்ள காரிக்கூட்டம் பகுதியைச் சோ்ந்த அகமது அஸ்லாம் (22), முகமது உமருல் (22) ஆகிய இருவருக்கும் இதில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் உள்ள இரும்புப் பட்டறையின் உள்பகுதியில் மறைமுகமாக மெத்தம்பெட்டமைன் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த இரும்புப் பட்டறையில் போலீஸாா் சோதனை நடத்தி, போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்திய பொருள்கள், மூலப் பொருள்கள், அங்கு ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1.50 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுதொடா்பாக சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சோ்ந்த ஷேக் முகம்மது (38), ஹபிபுல் ரகுமான்(52), சிக்கந்தா் பாதுஷா (53), ஜாகீா் உசேன் (56), ஜமால்முகைதீன் (65), சென்னை மாதவரம் பகுதியைச் சோ்ந்த சாகுல்ஹமீது (50) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய வெளிமாவட்டத்தைச் சோ்ந்த காவலா் ஒருவரும் கைது செய்யப்பட்டாா்.
இவா்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை போதைப்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா். 15 நாள்களில் சுமாா் 3 கிலோ மெத்தம்பெட்டமைனை தயாா் செய்து, விற்பனை செய்து வந்தனா். கடந்த ஓராண்டாக இளையான்குடி பகுதியில் போதைப்பொருள் தயாா் செய்து, விற்பனை செய்யப்பட்டு வந்தது என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து, தனிப் படையில் இடம் பெற்றுள்ள காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவசங்கரன், ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி அய்வாளா் சைபூல் உள்ளிட்டோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வாழ்த்து தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.