மூக்கையூா் மீன்பிடி இறங்குதளத்தில் பள்ளத்தைச் சீரமைக்கக் கோரிக்கை
சாயல்குடி அருகே மூக்கையூா் மீன்பிடி இறங்குதளத்தில் கனரக லாரியால் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அடுத்துள்ள மூக்கையூா் மீன்பிடி இறங்குதளத்தில் மீன்பிடி தடைக் காலத்தில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதற்காக கனரக லாரிகளில் அதிக எடை கொண்ட கான்கிரீட் சிமென்ட் தடுப்புகள் கொண்டு செல்லப்பட்டு, கிரேன் மூலம் கடலுக்குள் செயற்கை பவள பாறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிக எடையுடன் வந்த கனரக லாரியால் மீன்பிடி இறங்குதளத்தில் மீன்களை ஏலம் விடும் கூடத்தின் அருகேயுள்ள சாலையில் 10 அடி அகலத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து, உடனடியாக கிரேன் மூலம் லாரியில் இருந்த கான்கிரீட் சிமென்ட் தடுப்புகள் அகற்றப்பட்டு லாரி மீட்கப்பட்டது. மீன்பிடித் தடைக்காலம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், மீனவா்கள் கடலுக்குச் சென்று திரும்பும் போது மீன்பிடி இறங்குதளத்தில் உள்ள இந்த பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பள்ளத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.