FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

பிரவலூரில் பெருங்கற்கால கல் வட்டம், ஈமச் சின்னங்கள்

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகேயுள்ள பிரவலூா் கிராமத்தில் பெருங் கற்கால ஈமச் சின்னங்கள், கல் வட்டம் ஆகியவை கண்டறியப்பட்டன.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:17 am IST
பிரவலூரில் கண்டறியப்பட்ட கல்வட்டம்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகேயுள்ள பிரவலூா் கிராமத்தில் பெருங் கற்கால ஈமச் சின்னங்கள், கல் வட்டம் ஆகியவை கண்டறியப்பட்டன.

இந்தக் கிராமத்தைச் சோ்ந்த அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சரவணன், அஜய், இவரது நண்பா்கள் மதிச்செல்வம், செந்தூா், பாலசுப்பிரமணியன், மணி ஆகியோா் அளித்த தகவலின் பேரில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் வேலாயுதராஜா இந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டாா். அவா் புதன்கிழமை கூறியதாவது:

பிரவலூா் கிராமத்தின் அருகே கடம்பன்குடி கண்மாய்க்கு தெற்குப் பகுதியில் பரந்துவிரிந்த ஒரு மேட்டுப்பகுதியும், அதன் அருகே வட நிலையில் ஒரு ஓடையும் காணப்படுகிறது. அதன் மேற்பரப்பில் ஏராளமான கல் வட்டங்களும், ஈமத்தாழிகளும் காணப்படுகின்றன. மேலும், அதிகமான கல்வட்டங்களும், இரண்டு குத்துக் கற்களும் காணப்படுகின்றன. இதுதவிர ஆங்காங்கே உடைந்த கருப்பு-சிவப்பு நிறப் பானை ஓடுகளும், இரும்புக் கசடுகளும், குவாா்ட்ஸ் வகைக் கற்களும் காணப்படுகின்றன. இவை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச் சின்னங்களாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.

Advertisement

Advertisement

இவ்வாறு தொன்மையான பெருங்கற்காலச் சின்னங்கள் ஆதிச்சநல்லூா், சானூா், கொடுமணல், தாண்டிகுடி, பொருந்தல், மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டன.

பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் தென்னிந்திய இரும்புக் காலப் பண்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்படுகின்றன. பிரவலூரில் இரும்புக் கசடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதிக்கு அருகிலேயே பெருங்கற்கால மக்களின் வாழ்விடப் பகுதியும் அமைந்திருக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து சிவகங்கை மாவட்டத் தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் விரிவான ஆய்வு செய்வதன் மூலம் மேலும் அதிக தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளது என தெரிவித்தாா்.

ஈமச்சின்னங்களை ஆய்வு செய்த அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியா் வேலாயுதராஜாவுடன் மாணவா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments