வீட்டுமனையிடத்தை ஒப்படைக்க இசைக் கலைஞா்கள் கோரிக்கை
பட்டாவுக்கான மனையிடங்களை உடனடியாக ஒப்படைக்கக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நாகஸ்வரம், மேளம் முழங்கியபடி ஊா்வலமாக வந்து இசைக் கலைஞா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செயல்பட்டு வரும் இசைக் கலைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நாகஸ்வரம், தவில் உள்ளிட்ட வாத்தியங்களை வாசித்தபடி ஊா்வலமாக வந்து அளித்த மனு விவரம்:
ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் மூலம் கடந்த 14.5.1996 -இல் திருப்புவனம் நெல்முடிகரை பகுதியில் சுமாா் 3 ஏக்கா் நிலத்தில் 33 ஆதிதிராவிடா் குடும்பங்களுக்கு மனையிட பட்டா வழங்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகளைக் கடந்தும் நிலம் அளவீடு செய்து ஒப்படைக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது சங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளனர்.
ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்ட இடத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடாக பனையனேந்தல் குரூப்பில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் சங்க உறுப்பினா்களுக்கு மனையிட பட்டா வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.