ஆண்டிபட்டியில் குடிநீர் கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஆண்டிபட்டியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகிக்கவில்லை எனக் கூறி, அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆண்டிபட்டியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகிக்கவில்லை எனக் கூறி, அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சிக்குள்பட்ட சீனிவாசா நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு, ஆண்டிபட்டி பேரூராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும், இப்பகுதியில் சாலை பணி நடைபெறுவதால், அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது. குழாய்களை சீரமைக்காததால், அங்குள்ள தெருக்களில் பெரும்பாலான வீடுகளுக்கு தண்ணீர் வரவில்லையாம். இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து பேரூராட்சி ஊழியர்களிடம் கேட்டால் சரியான பதிலளிக்கவில்லை எனக் கூறி, 30-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த பேரூராட்சி அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் விரைவில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.