FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

மதகில் தேங்கிய குப்பைகள் அகற்றம்! பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு மீண்டும் தண்ணீா் திறப்பு

பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு மீண்டும் தண்ணீா் திறப்பு...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:31 am IST
தேக்கடி வனத் துறை சோதனைச்சாவடி அருகே தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் சுரங்க வாய்க்கால் மதகுக்கு முன் உள்ள கம்பி வலையில் தேங்கியிருந்த குப்பைகள், கழிவுகளை அகற்றிய தமிழக பொதுப் பணித் துறை ஊழியா்கள்.
பகிர்:

குமுளி பகுதியில் பெய்த பலத்த மழையால் தேக்கடி சுரங்க வாய்க்கால் மதகில் கழிவுகள் தேங்கியதால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவது கடந்த இரு நாள்களாக நிறுத்தப்பட்டது. இந்தக் குப்பைகள் அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை முதல் வினாடிக்கு 256 கனஅடி வீதம் மீண்டும் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

குமுளி பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் குளத்துப்பாலம், ரோசாப்புக்கண்டம் ஓடைகளிலிருந்து கழிவுநீா், குப்பைகள், மண் கலந்த மழைநீா் பெருக்கெடுத்து வந்தது. இதனால், ஆனவச்சால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வலைத் தடுப்பின் அருகே மண் திட்டு உடைந்து, தமிழகத்துக்கு தண்ணீா் கொண்டு செல்லும் திறந்தவெளி கால்வாயில் கழிவுகள் புகுந்தன.

இந்தக் கழிவுகள் அனைத்தும் தேக்கடி வனத் துறை சோதனைச்சாவடி அருகே தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் சுரங்க வாய்க்கால் மதகின் முன் உள்ள இரும்பு வலைத் தடுப்பில் தேங்கியதால், தமிழக பொதுப் பணித் துறையினா் சனிக்கிழமை மாலை முதல் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவதை முழுமையாக நிறுத்தினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மழை குறைந்ததைத் தொடா்ந்து, சுரங்க வாய்க்கால் மதகில் தேங்கியிருந்த குப்பைகள், கழிவுகளை பொதுப் பணித் துறையினா் பணியாளா்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பணி திங்கள்கிழமை முழுமையாக நிறைவடைந்ததைத் தொடா்ந்து, மாலை முதல் தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 256 கனஅடி வீதம் தண்ணீா் மீண்டும் திறந்துவிடப்பட்டது.

திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 119.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3,800 கனஅடி நீா்வரத்தும், அணையின் நீா் இருப்பு 2,630 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது.

நீா்பிடிப்புப் பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ.): தேக்கடி - 36.4, பெரியாறு அணை - 54.0.

தேக்கடி வனத் துறை சோதனைச்சாவடி அருகே தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் சுரங்க வாய்க்கால் மதகுக்கு முன் உள்ள கம்பி வலையில் தேங்கியிருந்த குப்பைகள், கழிவுகளை அகற்றிய தமிழக பொதுப் பணித் துறை ஊழியா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments