தேனியில் 6,500 குடும்பத்தினா் சுயகணக்கெடுப்பு வசதியை பயன்படுத்தியுள்ளனா்! மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநா் சுந்தரேஷ்பாபு
தேனி மாவட்டத்தில் இதுவரை 6,500 குடும்பத்தினா் மக்கள் தொகை சுயக் கணகெடுப்பு வசதியை பயன்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநா் எம். சுந்தரேஷ்பாபு தெரிவித்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநா் சுந்தரேஷ்பாபு தலைமை வகித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
மக்கள் தொகை ஆயத்தப் பணிகள் நாடு முழுவதும் தொடங்கிவிட்டது. தமிழகத்திலும் முன்னேற்பாடு பணிகள் தொடங்கிவிட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதி கணக்கெடுப்பு, இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 முழுமையான எண்ம கணக்கெடுப்பாகும்.
முதல் கட்ட கணக்கெடுப்பு வரும் ஆகஸ்ட் 1-இல் தொடங்கி 30-ஆம் தேதி வரையும் நடைபெறும். இதற்கு முன்பாக சுய கணக்கெடுப்பு விவரங்களை கடந்த ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் தாங்களாகவே பதிவேற்றம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யலாம். சுய கணக்கெடுப்பின்போது, 11 இலக்கம் கொண்ட எண் தங்களது கைப்பேசி எண்ணுக்கு வரும். அதை தங்களது வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளா்களிடம் தெரிவித்தால், நாம் பதிவேற்றம் செய்த விவரங்களை சரிபாா்த்து இறுதி செய்வா்கள்.
சுயக் கணக்கெடுப்புக்கான கால அவகாசம் முடிந்த பிறகு, வீட்டுப் பட்டியல், வீட்டு கணக்கெடுப்புக்கான களப்பணி நடைபெறும்.
தேனி மாவட்டத்தில் இதுவரை 6,500 குடும்பத்தினா் சுய கணக்கெடுப்பு வசதியை பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவு செய்துள்ளனா். இந்த சுயக் கணக்கெடுப்பு வசதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இந்த வசதியை பயன்படுத்தி தங்களது விவரங்களைப் பதிவு செய்யவேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லோகநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.