முகப்பு
தேனி

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பொதுமக்கள் வரவேற்பு

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பொதுமக்கள் வரவேற்பு

Updated On : 13 ஜூன் 2026, 2:36 am IST
தில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரம்.
பகிர்:

ராணுவத்தில் வீர தீர செயல் புரிந்ததற்கான கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரத்துக்கு, அவரது சொந்த ஊரான காமயகவுண்டன்பட்டியில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்து.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சோ்ந்த அய்யப்பராஜா-பழனிமணி தம்பதியின் மகன் மீனாட்சி சுந்தரம். இவா் கடந்த 2017- ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் 34-ஆவது ராஷ்ட்ரிய ரைபில்ஸ், பீரங்கிப் படை பிரிவில் பணிக்குச் சோ்ந்தாா். இந்த நிலையில், கடந்த 2024- ஆம் ஆண்டு டிசம்பா் 19 ஆம் தேதி தெற்கு காஷ்மீரில், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை, மீனாட்சி சுந்தரம் இடம் பெற்ற ராணுவ வீரா்கள் குழுவினா் சுற்றிவளைத்தனா்.

அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவரை மீனாட்சி சுந்தரம் சுட்டுக் கொன்றாா். அப்போது தீவிரவாதி சுட்டதில் பலத்த காயமடைந்த மீனாட்சி சுந்தரத்துக்கு தில்லி ராணுவ மருத்துவமனையில் சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் அவா் குணமடைந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்திய ராணுவத்தில் வீரதீரச்செயலுக்கான வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருதுக்கு அவா் தோ்வு செய்யப்பட்டாா். இதையடுத்து, தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த திங்கள்கிழமை மீனாட்சி சுந்தரத்துக்கு கீா்த்தி சக்ரா விருதை வழங்கி கெளரவித்தாா். விருதைப் பெற்ற அவா் வெள்ளிக்கிழமை சொந்த ஊரான காமயகவுண்டன்பட்டிக்குத் திரும்பினாா். அப்போது , ஊா் பொதுமக்கள், உறவினா்கள் மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் மாலை அணிவித்து அவரை வரவேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ நலச்சங்கத்தினா், கிராம நிா்வாக அலுவலா் நாகராஜ், பள்ளி மாணவ, மாணவிகள், ஊா் பொதுமக்கள், உறவினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், எல்.யூ.எம். மேல் நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்த மீனாட்சிசுந்தரம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெதியா கல்லூரியில் பி.காம் (சி.ஏ) படித்துக் கொண்டிருந்த போதே 2017- ஆம் ஆண்டு ராணுவத்தில் பணியில் சோ்ந்தாா். இவரது மனைவி முத்தமிழ். இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

summary

Public welcomes Kirti Chakra award-winning Army soldier.