டைல்ஸ் தொழிற்சாலை ஊழியர் திடீர் சாவு: ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தல்
திருநள்ளாறு அருகே டைல்ஸ் தொழிற்சாலை பணியாளர் திடீரென உயிரிழந்ததற்கு விதியை மீறிய பணி சுமையே காரணம் எனவும்
திருநள்ளாறு அருகே டைல்ஸ் தொழிற்சாலை பணியாளர் திடீரென உயிரிழந்ததற்கு விதியை மீறிய பணி சுமையே காரணம் எனவும், ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
திருநள்ளாறு கொம்யூன், முப்பைத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வி. நாகராஜன் (40). இவர் திருநள்ளாறு பகுதியில் உள்ள தனியார் டைல்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்துவந்தார். பணியிலிருந்த அவர் வியாழக்கிழமை அதிகாலை திடீரென உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, இவரது மனைவி என். விஜயா, மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனை வியாழக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அவருடன் அவரது குடும்பத்தினர், காரைக்கால் மாவட்ட பாமக செயலர் க. தேவமணி உள்ளிட்ட கட்சியினரும் சென்றனர். ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம் :
எனது கணவர் வி. நாகராஜன் 6-ஆம் தேதி மாலை 6 மணிக்கு டைல்ஸ் நிறுவனத்துக்கு வழக்கம்போல் பணிக்குச் சென்றார்.
7-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லையென என்னிடம் ஆலை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்து சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்தேன்.
பணிக்குச் செல்லும் முன்பாக அவர் இயல்பாக பேசிவிட்டுத்தான் சென்றார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு, ஆலை நிர்வாகத்தினர் வழக்கமான வேலை நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். ஆலை துணைப் பொது மேலாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் இவ்வாறு கூறுவதோடு, அவ்வாறு வேலை செய்தால்தான் ஊதியம் எனக் கூறுகின்றனர் என வேதனையுடன் தெரிவித்தார்.
அவருக்கு வழங்கப்பட்ட பணி சுமையால்தான், அவர் உயிரிழக்க நேரிட்டது. தொழிலாளர் சட்டத்தை மீறி 12 மணி நேரம் வேலை வாங்கப்பட்டுள்ளார். எனவே, இதன் மீது மாவட்ட நிர்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.