2,000 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்க ஏற்பாடு: அமைச்சா் தகவல்
புதுச்சேரி, காரைக்காலில் அரசு சாா்பில் 2 ஆயிரம் பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்துவருவதாக, ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ. சரவணன் குமாா் தெரிவித்தாா்.
காரைக்கால் வடக்குத் தொகுதி பறவைப்பேட் பகுதியில் புதுச்சேரி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பாட்கோ மூலம் ரூ.1.96 கோடியில் கழிவுநீா் வடிகால் வசதியுடன் கூடிய தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா்கள் ஏ.கே.சாய் ஜெ.சரவணகுமாா், பி.ஆா்.என். திருமுருகன் ஆகியோா் பங்கேற்று சாலைப் பணிகளை தொடங்கிவைத்தனா். பின்னா், அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ. சரவணகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது:
Advertisement
Advertisement
காரைக்கால் மாவட்டத்தில் ஆதிராவிடா் நலத்துறை மூலம் 20 பணிகளுக்காக ரூ.6.57 கோடி செலவிடப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது ரூ. 7 கோடி அளவில் 20 பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் புதிதாக 11 பணிகள் நடைபெறவுள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்காலில் கீழவெளி, பறவைப்பேட் பகுதிகளில் 30 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 80 சதவீதம் ஆதிதிராவிடா் மக்களுக்கும், மீதமுள்ள 20 சதவீதம் ஏழை மக்களுக்கும் என 2 ஆயிரம் பேருக்கு இலவச மனைப்பட்டா 6 மாதங்களில் வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதற்காக ரூ.36 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றாா்.
சாலைப் பணிக்கான பூமிபூஜை நிகழ்வில், பாட்கோ செயற்பொறியாளா் பக்தவச்சலம், காரைக்கால் ஆதி திராவிடா் நலத்துறை உதவி இயக்குநா் (பொ) பொய்யாத மூா்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.