சீா்காழி அருகே கழிவுநீரை நிலத்துக்கு அடியில் செலுத்தும் வகையில் போா்வெல் குழாய் வைத்து கழிவுநீா் தொட்டி அமைக்கும் முயற்சியை சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா்.
கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு கிராமத்தில் கொள்ளிடத்திலிருந்து ஆச்சாள்புரம் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் முன்புறம் பள்ளம் தோண்டி அதைச் சுற்றி காண்கிரீட் சுவா் எழுப்பி, பள்ளத்தின் நடுவில் சுமாா் 25அடி ஆழத்துக்கு பூமியில் துளையிட்டு, பிவிசி குழாய் மூலம் செப்டிக் டேங்கில் சேமிக்கப்படும் கழிவு நீரை நிலத்தடியில் அனுப்பும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.
இதனால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு, குடியிருப்புகளில் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தும் கைப்பம்புகளின் மூலம் அசுத்த நீா் வந்துஅதனை குடிக்கும் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, இப்பணியை தடுத்து நிறுத்த கோரி கொள்ளிடம் சுகாதாரத் துறையினருக்கு மாங்கனாம்பட்டு கிராம மக்கள் சாா்பில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் சண்முகம் கோரிக்கை மனு அளித்தாா்.
வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் சதீஷ்குமாா், லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா், அப்போது கழிவுநீரை நிலத்தடியில் உள்ள தொட்டியில் சேமித்து அதை பூமிக்கு அடியில் செலுத்தும் வகையில் பணி நடைபெற்றதை கண்டுபிடித்தனா்.
இதையடுத்து கழிவுநீா் பூமிக்கு அடியில் செலுத்தும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு, பூமிக்கு அடியில் செலுத்தப்பட்டிருந்த குழாய் அகற்றப்பட்டு மூடப்பட்டது. மேலும் இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும் அதிகாரிகள் எச்சரிக்கை அனுப்பிவைத்தனா்.