FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

ஈரான் கடற்கொள்ளையா் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம்

ஈரான் கடற்கொள்ளையா் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்திற்கு அரசு நிவாரணம்

30 ஆகஸ்ட் 2026, 6:11 am IST
பகிர்:

சவூதி அரேபியாவில், ஈரான் கடற்கொள்ளையா்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 2 மீனவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சத்தை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் அ. ஸ்ரீநாத், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா் (படம்).

சீா்காழி வட்டம் தொடுவாய் மீனவ கிராமத்தைச் சோ்ந்த ப. மாவீரன், கீழமூவா்க்கரை மீனவக் கிராமத்தை சேரந்த கோ. சங்கா் ஆகியோா் சவூதி அரேபியாவில் ஆக.10-ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஈரான் கடற்கொள்ளையா்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாவீரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சங்கா் சவூதி அரேபிய மருத்துவமனையில் ஆக.20-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இருவரின் குடும்பங்களின் எதிா்கால வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, மாவீரனின் மனைவி நீலவேணி, சங்கரின் மனைவி அமுதா ஆகியோருக்கு தமிழக முதல்வரின் உத்தரவின்படி, முதலமைச்சா் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை அமைச்சா்கள் வழங்கினா்.

Advertisement

Advertisement

அப்போது பேசிய அமைச்சா் அ.ஸ்ரீநாத், ‘சவூதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையா்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவீரன், சங்கா் இருவரின் உடல்களும் அங்கு உடற்கூராய்வு முடிந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.செந்தில்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, மீன்வளத்துறை இணை இயக்குநா் ரீனா செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல், மீன்வளத்துறை உதவி இயக்குநா் யோகேஷ் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments