ராகுல் போராட்டத்துக்கு வெற்றி: துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வழக்குப் பதிந்தது தில்லி போலீஸ்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் போராட்டத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தில்லி போலீஸ் வழக்குப் பதிவு...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் போராட்டத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தில்லி போலீஸ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தில்லியில் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மீது பெல்லட் குண்டுகள் மூலம் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் சாஹில் லோச்சவ், கடந்த ஆக. 14 ஆம் தேதி வழக்குரைஞருடன் சென்று தில்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை புகார் எண் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தில்லி நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்துக்கு பாதிக்கப்பட்ட இளைஞருடன் சென்று, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, அதன் நகலை அளிக்குமாறு வலியுறுத்தினார்.
அவரது கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து, காவல் துணை ஆணையர் அலுவலகம் முன்பாக அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
சிறிது நேரத்தில், காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியும் அங்கு வந்ததைத் தொடர்ந்து அவர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் தொடர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று மாலை லோச்சாப் அளித்த புகாரின் அடிப்படையில், பெயர் குறிப்பிடாமல் தில்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் குற்றவாளியாக யாருடைய பெயரும் சேர்க்கப்படவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வழக்குப் பதிவுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், “கடந்த ஜூலை 20-ஆம் தேதி கன்னாட் என்ற இடத்தில் போராட்டத்தின்போது பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடலுக்குள் 200-க்கும் மேற்பட்ட தோட்டா உறைகளும், கண்ணில் 3 தோட்டா உறைகளும் இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கை கூறுகிறது. அவர் பார்வையையும் இழந்துள்ளார்.
பெல்லட் துப்பாக்கியால் சுடவில்லை என்று தில்லி காவல்துறை கூறும் நேரத்தில் எனக்கு ஒரேயொரு கேள்விதான் எழுகிறது. யாரோ ஒருவர் இதை செய்திருக்க வேண்டும். இதற்காகத்தான் வழக்குப் பதிவு செய்ய கூறுகிறோம்” என்றார்.
High drama unfolded in Delhi on Friday as Lok Sabha Leader of Opposition Rahul Gandhi staged a dharna outside the Parliament Street Police Station with alleged pellet-gun injury victim Sahil Lochav, demanding an FIR and accountability over the July 20 Jantar Mantar protest.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.