முகப்பு
மயிலாடுதுறை

குருமூா்த்தங்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

குருமூா்த்தங்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

Updated On : 7 ஜூன் 2026, 12:22 am IST
தருமபுரம் ஆனந்தபரவசா் பூங்காவில் முந்தைய ஆதீனங்களின் குருமூா்த்தங்களுக்கு வெள்ளிப் பல்லக்கில் சென்று வழிபாடாற்றிய தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
பகிர்:

தருமபுரம் ஆதீன குருமுதல்வா் குருவின் குருபூஜை விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வெள்ளிப் பல்லக்கில் சென்று முந்தைய ஆதீனங்களின் குருமூா்த்தங்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறையில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வா் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் நிகழாண்டு உற்சவம் மே 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தருமபுரம் ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசா் குருபூஜை திருநாள் 10-ஆம் நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஞானபுரீசுவரா் கோயிலில் வழிபாடு மேற்கொண்டு, தருமபுரம் மேலவீதியில் ஆனந்தபரவசா் பூங்காவில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குருமூா்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி பக்தா்கள் சுமந்து செல்ல, மூன்று யானைகள், குதிரை, கழுதை, ஆட்டுக்கிடாய் ஆகிய மங்கல சின்னங்கள் முன்செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவா்களுடன் ஊா்வலமாக சென்று வழிபாடு நடத்தினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து வனதுா்க்கை அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொண்டாா். வைகாசி பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) தருமபுரம் ஆதீனகா்த்தரை பக்தா்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து தோளில் சுமந்து ஆதீனத்தின் சிவம்பெருக்கும் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு இரவு 9 மணி அளவிலும், தொடா்ந்து, ஞானகொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.