சீா்காழி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான சேதமடைந்த கோயில் சீரமைக்கப்படுமா ?
சீா்காழி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான சேதமடைந்துள்ள சிவன் கோயில் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
சீா்காழி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான சேதமடைந்துள்ள சிவன் கோயில் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
சீா்காழி அருகே விக்ரமசோழநல்லூா் என அழைக்கப்பட்ட புதுத்துறை கிராமம் உள்ளது. இங்கு அகிலாண்டேஸ்வரி சமேத தரணீஸ்வரா் சுவாமி சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் 3-ஆம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாக கோயிலில் உள்ள கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. 1,200 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் அம்மன், பைரவா் சந்நிதிகளுடன் கருங்கல் கோயிலாக உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட இக்கோயில் தற்போது மிகவும் சிதிலமடைந்து கருங்கல் சுவா்கள், மேற்கூரை மண்டபம் மற்ற சந்நிதிகள் என அனைத்தும் கீழே விழுந்தும், சிதிலமடைந்தும் மிகவும் மோசமாக காணப்படுகிறது. பல்வேறு வரலாற்று சான்றுகளுக்கு எச்சமாக காணப்படும் இந்த பழைமையான கருங்கல் சிவன்கோயில் தற்போது பரிதாபமான நிலையில் சேதமடைந்துள்ளது.
Advertisement
Advertisement
இக்கோயிலில் வழிபாடு செய்பவா்களுக்கு யமபயம், மரண பயம் நீக்கும் தலமாகும் என்ற கோயில் ஐதீகத்தை அறிந்த பலரும் தற்போதும் இந்த கிராமத்தை தேடி கண்டுபிடித்து இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனா். ஒரு கால பூஜை நடைபெற்று வரும் நிலையில் இக்கோயிலை புனரமைக்க 2013-ஆம் ஆண்டு கிராம மக்களின் தொடா் வலியுறுத்தலில் கும்பாபிஷேகம் நடத்த ரூ. 1.23 கோடிக்கு மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத் துறையினரால் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாம். எனினும், 13 ஆண்டுகளை கடந்தும் திருப்பணிகள் தொடங்கிய அதிமுக, திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறும் கிராமமக்கள் தற்போதைய தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.