FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

தமிழக அரசிடம் நீர் மேலாண்மைத் திட்டம் இல்லாததால் பல லட்சம் கனஅடி நீர் கடலில் கலக்கிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழக அரசிடம் நீர் மேலாண்மைத் திட்டம் இல்லாததால், பல லட்சம் கனஅடி தண்ணீர் கடலில் கலந்து வீணாவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். 

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 9:37 am IST
பகிர்:

தமிழக அரசிடம் நீர் மேலாண்மைத் திட்டம் இல்லாததால், பல லட்சம் கனஅடி தண்ணீர் கடலில் கலந்து வீணாவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். 
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பழையார் முகத்துவாரத்தில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் லட்சக்கணக்கான கனஅடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. ஒருபக்கம் வெள்ளம். மறுபக்கம் கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை பகுதிகளில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை. இந்த 5 வாரங்களில் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு 242 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது.
இதில், 93 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து ஏறத்தாழ 149 டி.எம்.சி. தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து 15 டி.எம்.சி., அமராவதியிலிருந்து 6 டி.எம்.சி. என ஏறத்தாழ 170 டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் வந்துள்ளது. இதில், 60 டி.எம்.சி. மட்டுமே விவசாயத்துக்காக ஆங்காங்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மீதி 110 டி.எம்.சி. கடலில் கலந்திருக்கிறது.
கொள்ளிடத்தில் மட்டும் 80 டி.எம்.சி. கடலில் கலந்து வீணாகியுள்ளது. கடலூர், சிதம்பரம் வரும் வரை எந்த வாய்க்காலிலும் தண்ணீர் இல்லை. கொள்ளிடம் பகுதியிலும் எந்த வாய்க்காலிலும் தண்ணீர் சரியாக செல்லவில்லை. ஆனால், 2 லட்சம் கனஅடி தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது.
தமிழக அரசிடம் நீர் மேலாண்மைத் திட்டம் இல்லாததால், பல லட்சம் கனஅடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. நீர் மேலாண்மைக்கு அரசு முக்கியத்துவம் தரவேண்டும். குறிப்பாக, கொள்ளிடம் ஆற்றில் திருச்சி முக்கொம்பிலிருந்து 10 தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். காலநிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி மாறி, மாறி வரும். இது மிகப்பெரிய பிரச்னையாக வருங்காலத்தில் உருவெடுக்கும். அதற்கு முன்னெச்சரிக்கையாக அரசு செயல்பட வேண்டும் என்றார் அவர். 
அப்போது, பாமக மாநில தலைவர் ஜி.கே. மணி, துணைப் பொதுச் செயலாளர் பழனிசாமி, மாவட்டச் செயலாளர் லண்டன். அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments