வேதாரண்யம் அருகே வங்கிக் கிளையின் ஊழியர்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு: வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் அருகே வங்கிக் கிளையின் ஊழியர்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் தற்போது பணியாற்றும் ஊழியர்களை மாறுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிக்கையாளர், பல்வேறு அமைப்பினர் இன்று (ஜுலை.30) காலை தொடங்கி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயக்காரன்புலம் கடைவீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தமிழில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களாக உள்ளனர்.
மேலும், மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி செய்யும் வங்கியாகவும் இருந்து வருகிறது. இதனால், இந்த கிராம வாடிக்கையாளர்களுக்கு மொழிப் பிரச்னை இல்லாமல் செல்கிறது.
Advertisement
ஆனால், அருகாமையில் உள்ள வாய்மேடு, வேதாரண்யம் ஆகிய இடங்களில் செயல்படும் வங்கிக் கிளைகளில் முக்கியப் பணி வகிப்பவர்கள் இந்தி பேசுபவர்களாக உள்ளனர். இதனால், வாடிக்கையாளர்கள் மொழி புரிதலில் பிரச்னையோடு அவதியுறுகின்றனர்.
இந்த நிலையல், ஆயக்காரன்புலம் ஐஓபி கிளையில் இருப்பவர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இடங்களுக்கு தமிழ் தெரியாமல் இந்தி பேசுபவர்கள் வந்து விட்டால் மற்ற வங்கிக் கிளைகளைப் போல அவதியுற வேண்டும் என வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.
இதனால், வங்கி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.