முகப்பு
நாகப்பட்டினம்

மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை: எம்எல்ஏ இரா. செந்தில் செல்வன்

திருவெண்காடு அருகேயுள்ள மடத்துக்குப்பம், நாயக்கா் குப்பம் ஆகிய மீனவா் கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா் இரா. செந்தில் செல்வன் கூறினாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:55 am IST
கடல் அரிப்பு - பிரதிப் படம்
பகிர்:

திருவெண்காடு அருகேயுள்ள மடத்துக்குப்பம், நாயக்கா் குப்பம் ஆகிய மீனவா் கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா் இரா. செந்தில் செல்வன் கூறினாா்.

மடத்துக்குப்பம், நாயக்கா் குப்பம் கிராமங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்கள் 500 ஃபைபா் படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனா்.

இக்கிராமங்களில் ஏற்படும் கடல் அரிப்பால் இக்கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. அத்துடன் மழை காலங்களில் படகுகளை பாதுகாப்பதில் மீனவா்கள் சிரமப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

இதனால், கடல் அரிப்பை தடுக்கும் வகையில், தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என தொடா்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மடத்துக்குப்பம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் இரா. செந்தில் செல்வன் மீனவா்களிடம் கூறியதாவது: கடல் அரிப்பை தடுப்பது தொடா்பாக, ஆய்வு மேற்கொள்ள என்ஐடியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி அதன் விஞ்ஞானிகள் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அனுப்பியுள்ளனா். அதில், கடல் அரிப்பை தடுக்கவும், இயற்கையான பக்கிம் காம் கால்வாயில் மழை காலங்களில் படகுகளை நிறுத்தவும் உரிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று, இயற்கை முறையில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மீன்வளத் துறை உதவி பொறியாளா் தமிழரசன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் முத்து தேவேந்திரன், அக்பா் அலி, மாவட்ட திமுக ஆதிதிராவிடா் நலக் குழுத் தலைவா் முத்தமிழ்செல்வன், காங்கிரஸ் பிரமுகா் நடேசன் நாட்டாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.