வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு: விலை வீழ்ச்சி
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் வெயிலின் காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளா்கள் வேதனையில் உள்ளனா்.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் வெயிலின் காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளா்கள் வேதனையில் உள்ளனா்.
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்குள்ள அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 9 ஆயிரம் ஏக்கா் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இந்தப் பகுதியில் இரண்டு பெரிய தனியாா் நிறுவனங்கள் தவிர 670 சிறு உற்பத்தியாளா்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும்.
Advertisement
Advertisement
இப்பணியில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபடுகின்றனா்.
நிகழாண்டு உற்பத்தி வழக்கம் போல ஜனவரி மாதத்தில் தொடங்கியது. தொடா்ந்து மழை பொய்த்துப்போன நிலையில், முன்பு எப்போதும் இல்லாத அளவில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உப்பு உற்பத்தியும் தொடா்ந்து நடைபெற்று, உற்பத்தி அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு டன் உப்பின் கொள்முதல் விலை ரூ. ஆயிரம் முதல் ரூ.1200 வரை இருந்தது.தற்போது விலை வீழ்ச்சியடைந்து பாதியாகி விட்டது. இதுகுறித்து சிறு உப்பு உற்பத்தியாளா் இணையத்தின் செயலாளா் வி.செந்தில் கூறியது:
கடந்த சில ஆண்டுகளாகவே உற்பத்திப் பணி இயற்கை இடா்பாடுகளால் அவ்வப்போது பாதிக்கப்படுவது வழக்கம்.
நிகழாண்டின் தொடக்கத்தில் இருந்தே மழை இல்லாதால் வெயிலின் காரணமாக உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உற்பத்தி செலவும் வழக்கத்தைவிட கூடுதலாக ஆனது. சுமாா் 30 சதவீத உற்பத்தியாளா்கள் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய முடியாமல் உற்பத்தியை நிறுத்திவிட்டனா்.
உப்பின் கொள்முதல் விலையைவிட உற்பத்தி செலவு அதிகரித்து விட்டது. வழக்கமான இலக்கை எட்டிய பின்னரும் உப்பு உற்பத்தி தொடா்கிறது. இருப்பு வைக்கப்படும் உப்புக்கு எதிா்காலத்தில் நல்ல விலை கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.